S. Venkatesan condemn Pahalgam incident

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். காயமடைந்த 17 பேரும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி தலைமையில் நேற்று (23.04.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், “இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூடப்படுகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை. எஸ்விஇஎஸ்(SVES) விசாவில் தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும். பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ் (SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது.

Advertisment

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். முப்படைகளும் அதிக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தேடிக் கண்டுபிடித்து தண்டனை தரும் வரை ஓயமாட்டோம். பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும். பாதுகாப்பு; விமானப்படை; கடற்படை ஆலோசகர்கள் இஸ்லாபாத்தில் இருந்து அழைக்கப்படுவர். தூதராக உதவிகளை குறைக்கப்படும். சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யப்படும்” என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அவர்களின் உறவிகள் கதறி அழுகின்றனர். ஒரு பக்கம் மனைவி மறுபக்கம் பிள்ளைகள் என்று தங்களின் அப்பா, கணவர் ஆகியோர்களின் உடலை கூட பிரிய மனமில்லாமல் தவிக்கின்றனர். இது காட்சிகள் கோடிக்கணக்கான இந்தியர்களைக் கலங்கச் செய்திருக்கிறது.

Advertisment

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள எம்.பி. சு.வெங்கடேசன், “காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும் , பாதிக்கப்பட்டோருக்கு உயர் சிகிச்சையும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தாக்குதலில் பலியானவர்களினுடைய குடும்பங்களின் துயரத்திற்கு ஆறுதல் கூற வார்த்தையற்று தவிக்கிறது தேசம்” என்று வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.