Skip to main content

‘இந்தியா’; பெயரை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

rss leader Mohan Bhagwat criticized the name of India
கோப்புப்படம்

 

“நமது நாடு பாரதம். ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, முடிந்தவரை எல்லா துறைகளிலும் ‘பாரத்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். 

 

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று(1.9.2023) நாக்பூர் மற்றும் கவுஹாத்தியில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசினார். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்வுகளில் பேசிய அவர், “இந்துஸ்தான் ஒரு இந்து ராஷ்டிரா. இது ஒரு உண்மையும் கூட. கருத்தியல் ரீதியாக, அனைத்து பாரதிய மக்களும் இந்துக்களே. அதேபோல இந்துக்கள் அனைவரும் பாரதியர்களே. இன்று பாரதத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்து கலாச்சாரம், இந்து முன்னோர்கள் மற்றும் இந்து நிலத்துடன் தொடர்புடையவர்கள். சில மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். ஆனால் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சுயநலம் காரணமாக அதனைப் பின்பற்றவில்லை” என்றார். 

 

மேலும், ஆர்.எஸ்.எஸ். சங்கத்தின் சித்தாந்தம் உலகம் முழுவதும் அதிகம் தேடப்படுகிறது. ஏனெனில் இதற்கு மாற்று எதுவும் இல்லை. “எல்லோரும் இதைப் புரிந்து கொண்டுள்ளனர். சிலர் ஒப்புக்கொள்கிறார்கள், சிலர் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து, இப்போது நம் அனைவரின் கூட்டுத் தேவை என்பது ‘சுவதேசி’ குடும்ப விழுமியங்கள் மற்றும் ஒழுக்கத்தில் கவனம் செலுத்துவது ஆகும்” எனத் தெரிவித்தார். 

 

இதையடுத்து கவுஹாத்தியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய மோகன் பகவத், “பண்டைய காலம் தொட்டே பாரதம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வருவதால், ‘இந்தியா’ என அதனை அழைக்காமல் ‘பாரத்’ என்ற வார்த்தையை மக்கள் ஏற்றுக்கொள்ள முனைய வேண்டும். நமது நாட்டின் பெயர் காலம் காலமாக பாரதம் என்றே இருந்துள்ளது. எந்த மொழியாக இருந்தாலும், அதன் பெயர் அப்படியே தான் இருக்கும். நமது நாடு பாரதம். ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, முடிந்தவரை எல்லா துறைகளிலும் ‘பாரத்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மாற்றம் உண்டாகும். நம் நாட்டை ‘பாரதம்’ என்று அழைத்து அதனை மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும். இந்தியா எல்லோரையும் ஒன்றிணைக்கும் நாடு. இன்று உலகிற்கு இந்தியா தேவைப்படுகிறது. பாரதம் இல்லாமல் உலகம் இயங்காது எனவும் யோகா மூலம் உலகை இணைத்துள்ளோம்” என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியக் கல்வி முறையை ஆங்கிலேயர்கள் மாற்றியதை நாம் கடைப்பிடிக்கும் அதே வேளையில், புதிய கல்விக் கொள்கை குழந்தைகளிடையே தேச பக்தி உணர்வை அதிகரிக்கும் முயற்சியாகும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.