Rs.2000 notes to be withdrawn; SBI Circular issued

Advertisment

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளைவங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என்ற அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் எஸ்பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களிடம் படிவமோ, அடையாள ஆவணமோ கேட்காமல் ரூ.2000 நோட்டுகளை மாற்ற கிளைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்.பி.ஐ. வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை படிவத்தில், “ரூ.2000/- மதிப்பிலான வங்கி நோட்டுகளை அனைத்து பொதுமக்களுக்கும் ஒரே நேரத்தில் ரூ.20000/- வரை மாற்றிக்கொள்ளும் வசதி இணைக்கப்பட்டுள்ள வடிவத்தின்படி எந்த கோரிக்கைச் சீட்டும் பெறாமல் அனுமதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பரிமாற்றத்தின் போது மக்கள் அடையாளச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை” என்றும் சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.