Rs. 17 crore worth of gold seized in Andhra Pradesh

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் மே 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவில் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் போட்டியிடும் பித்தாபுரம் தொகுதியில் ரூ. 17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏ.டி.எம்-ல் பணம் நிரப்பும் வாகனத்தில் கடத்திச் சென்றபோது கொல்லப்ரோலு சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். விசாகப்பட்டினத்தில் இருந்து காக்கிநாடாவிற்கு தங்கம் கொண்டு செல்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் தங்கம் யாருடையது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வாகனத்தில் கடந்த மாதம் 13 ஆம் தேதி ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திச் சென்று பிடிபட்ட நிலையில், மீண்டும் அதே வாகனத்தில் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Rs. 17 crore worth of gold seized in Andhra Pradesh

இதே போன்று தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் ரூ. 23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் மற்றும் சைபராபாத் சிறப்பு தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 34.78 கிலோ எடை கொண்ட தங்க நகைகள், 43.60 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.