Skip to main content

ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்க... இரு மாநில போலீசார் இணைந்து செயல்பட முடிவு!

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

கடந்தாண்டு புதுச்சேரி காலாப்பட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஜோசப் கொலை, அதைத்தொடர்ந்து பழிக்கு பழியாக சில நாட்களுக்கு முன்பு காலாப்பட்டு சந்திரசேகர் கொலை மற்றும் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள், இரு மாநில எல்லைகளிலும் இடம் மாறி, மாறி தப்பித்து வருகின்றனர். மேலும் சமூக விரோத குற்றங்களையும் அரங்கேற்றி வருகின்றனர். 


அதனால் எல்லை பகுதிகளில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்கவும்,  புதுச்சேரி காமராஜ் நகர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் அசம்பாவிதங்கள், சட்ட விரோத செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் இரு மாநில போலீசார் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக, காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநில காவல்துறை அதிகாரிகள், கடலுார், விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

rowdy suppress the atrocities of the bully ...   Two state cops decide to work together!


புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் தலைமையில் நடந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடலுார் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ், புதுச்சேரி கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் எல்லை பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை அடையாளம் காண்பது, தலைமறைவு குற்றவாளிகள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்வது என்றும், புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மது கடத்தப்படுவதைத் தடுக்க இருமாநில போலீசார் இணைந்து செயல்படுவது என்றும் காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.


மேலும் எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகளை வலுப்படுத்துவது, பரிசு பொருட்கள் கடத்திச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது, தமிழக ரவுடிகள் புதுச்சேரியில் பதுங்கியிருந்தால் தகவல் தெரிவிக்கவும், புதுச்சேரி ரவுடிகள் தமிழகத்தில் பதுங்கியிருந்தால், அவர்களை கைது செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ரவுடிகளை ஒழிப்பதில் இரு மாநில போலீசாரும் தகவல் பரிமாற்றம் மூலம் இணைந்து செயல்படுவது என்று கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.