இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். பல மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன. மணிப்பூரில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இரு சமூகத்தினரிடையே வன்முறை நிலவி வந்ததையடுத்து, அங்குள்ள சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. இந்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், சில மாவட்டங்களில் மட்டும் அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.
அண்மையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை நிகழ்ந்தது. மணிப்பூரின் மோரே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்பு படையினர் மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி சிங்தம் அனந்த்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மற்றொரு அதிகாரி படுகாயம் அடைந்தார். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவு வருகிறது.
இந்த நிலையில், இம்பால் கிழக்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களுக்கு இடையே உள்ள சதாங் கிராமத்தில் ஆயுதமேந்திய ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிராமத் தன்னார்வலர் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு இம்பாலில் உள்ள சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மணிப்பூரில் பரபரப்பு தொடர்ந்து கொண்டே வருகிறது.