Skip to main content

"காந்தியையே விடவில்லை.. உங்களை விட்டுவிடுவோமா? - கர்நாடக முதல்வருக்கு மிரட்டல் விடுத்த வலதுசாரி ஆதரவாளர் கைது!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

right wing

 

கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு என்ற பகுதியில், சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த இந்து கோயில் ஒன்று, கர்நாடக அரசால் இடிக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கர்நாடகாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸும் அரசின் நடவடிக்கையை விமர்சித்தது. 

 

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை (18.09.2021) பத்திரிகையாளர்களைச் சந்தித்த வலதுசாரி ‘ஆர்வலர்’ தர்மேந்திர சுரட்கல், முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, அமைச்சர் சசிகலா ஜோலே ஆகியோரை தாக்கிப் பேசியதோடு, "நாங்கள் மகாத்மா காந்தியையே விடவில்லை. இந்துக்களைப் பாதுகாப்பதற்காக அவர்களைக் கொன்றோம். அப்படியிருக்கையில் உங்களை விட்டுவிடுவோம் என நினைக்கிறீர்களா?" என்றார். 

 

மேலும் அவர், "சித்ரதுர்காவிலும், தட்சிண கன்னடத்திலும், மைசூரிலும் அரசாங்கத்தால் கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. அரசாங்கத்தை நடத்துவது யார்? காங்கிரஸ் ஆட்சியின்போது இது நடந்திருந்தால், நிலைமை இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? இந்து மகாசபை இருக்கும்வரை, இந்து கோயில்களை இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதேபோன்று மசூதிகள் அல்லது தேவாலயங்கள் இடிக்கப்பட்டதற்கான சான்றுகளைக் காணமுடியுமா? கோவில்கள் மட்டுமே குறிவைக்கப்படுகின்றன. நமது அரசியலமைப்பு சமத்துவத்திற்கான உரிமையை உறுதிசெய்கிறது என்றால், இந்துக்கள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறார்கள்?" என பேசினார். 

 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இந்து மகாசபா மாநில தலைவர் எல்.கே. சுவர்ணா, தங்களது அமைப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இந்து மகாசபையின் பெயரைப் பயன்படுத்தி காந்திக்கு எதிராகவும், பிற அரசியலமைப்பு அதிகாரிகளுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பதாகக் காவல்துறையிடம் புகாரளித்தார். இதனையடுத்து  தர்மேந்திர சுரட்கலும், அவரது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

மங்களூர் நகர போலீஸ் கமிஷனர் சஷி குமார், தர்மேந்திர சுரட்கல் இந்து மகா சபையின் தலைவராக இருந்தவர் என்றும், ஆட்சேபனைக்குரிய நடத்தைக்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார் எனவும் தனக்குத் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தர்மேந்திர சுரட்கல் தற்போது அகில இந்திய இந்து மகாசபை என்ற அமைப்பில் செயல்படுவதாக கூறப்படுகிறது. 

 

கைது செய்யப்பட்ட மூவர் மீதும் கிரிமினல் சதி, மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் மோசடியில் ஈடுபடுவது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.