Skip to main content

50 சதவீதம் வரை ஊதிய குறைப்பு... ரிலையன்ஸ் நிறுவனத்தின் திட்டம்...

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

reliance to cut pays for employees

 

கரோனாவால் ஈடுபட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை ஊதிய குறைப்பு செய்யப்பட உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், சிறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து துறைகளை சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களும் இறங்குமுகத்தில் காணப்படுகின்றன. இந்த எதிர்ப்பாரா நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க நிறைய நிறுவனங்கள் சம்பள குறைப்பு மற்றும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது இழப்புகளை சமாளிக்கும் நோக்கில் தங்களது நிறுவன ஊழியர்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை ஊதிய குறைப்பை அறிவித்துள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் ஹிட்டல் மெஸ்வானி கூறும்போது, "சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் தேவை கணிசமான அளவு குறைந்துள்ளதால் ஹைட்ரோ கார்பன் வணிகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்த பாதிப்பை சரிக்கட்ட நிர்வாக இயக்குநர்கள், மூத்த இயக்குநர்களின் சம்பளமானது 30 சதவீதத்திலிருந்து 50 வரை குறைக்கப்படும். ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்குக் கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு ஊதிய குறைப்பு எதுவும் இருக்காது. மேலும், போனஸ், ஊக்கத் தொகை உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார். அதேபோல அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அடுத்த ஒரு வருடத்திற்கு தனக்கு ஊதியம் வேண்டாம் எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; அம்பானி, அதானி எந்த இடத்தில்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Publication of World Rich List

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், 200 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனரான தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க், 198 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். லுயுவுட்டன் ஆடம்பரப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கிறார். 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு தொழிலதிபரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 

Next Story

சாட் ஜிபிடி-க்கு போட்டியாக அம்பானி வெளியிடும் ‘ஹனூமான்’

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Ambani's new 'AI' model Hanooman to compete with chat GPT!

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும், திறம்படவும் செய்து முடிக்கிறது. அமெரிக்காவில் இருந்து உருவாக்கப்பட்ட ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக தற்போது இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தளத்தை பிரபல தொழிலதிபரின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவை சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ’ என்ற நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவு, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனை போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இதனையடுத்து, பல வகையான செயற்கை தொழில்நுட்பங்கள் இணையத்தில் பயன்பாட்டில் இருந்ததால் கூகுள் நிறுவனம் சரிவைக் கண்டது. 

இதனையடுத்து, ‘சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ‘பார்ட்’ என்ற செயற்கை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், ‘பார்ட்’ தொழில்நுட்பம் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை என்றே கூறப்படுகிறது. அதனால், அனைத்து தொழில்நுட்பங்களையும் மிஞ்சும் வகையில், ‘ஜெமினி’ என்ற செயற்கை நுண்ணறிவை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி ‘சாட் ஜிபிடி’க்கு போட்டியாக அமைந்தது. இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பலரும் தங்களின் பணியை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சாட் ஜி.பி.டி மற்றும் கூகுளின் ஜெமினி போன்றவற்றுடன் போட்டியாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் சிறந்த பொறியியல் பள்ளிகளால் ஆதரிக்கப்படும் ‘பாரத் ஜி.பி.டி’ ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ‘ஹனூமான்’ என்ற செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தவுள்ளது.  11 இந்திய மொழிகளில் செயல்படும் இந்த ‘ஏ.ஐ’ மாடல் வருகிற மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.