Skip to main content

ஆர்.பி.ஐ அறிவித்த சலுகைகள்.. மக்களுக்கு இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?

Published on 27/03/2020 | Edited on 07/09/2021

21 நாட்கள் கரோனா லாக்டவுன் தாக்கத்தை எதிர்கொள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்கள் பயனடையும் வகையிலான 1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நலத்திட்டச் சலுகைகளை அறிவித்த சூழலில் இன்று ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 

 

RBI Governor pressmeet amid corona lockdown

 

 

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,8 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,000 ஐ கடந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,17446 என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் கரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 694  என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 16 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 121 பேரும், கேரளாவில் 110 பேரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையைச் சீர்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், இதுகுறித்து பேசுகையில், "ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கடந்த மார்ச் 25 முதல் 27 வரை நடத்திய ஆலோசனைகளின்படி ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 75 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.15 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆகக் குறைக்கப்படுகிறது. மேலும், வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்ட தேவையில்லை. அதேபோல வங்கிகளும் அடுத்த மூன்று மாதங்களுக்குக் கடன் வசூலிப்பை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வீட்டுக்கடன் அளிக்கும் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும். மேலும், மூன்று மாதங்கள் வாடிக்கையாளர் தனது தவணையைச் செலுத்தாததால் அவரது சிபில் ஸ்கோர் பாதிக்கப்படக்கூடாது.

மிகமுக்கியமாக, பங்கு விலைகள் சரிவதை வைத்து மக்கள் தங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கி பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது எனக் கருதுவது தவறானது. தனியார் துறை வங்கிகள் உள்ளிட்ட வணிக வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதேபோல அனைத்து வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் (சிஆர்ஆர்) 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 3% ஆக நிர்ணயிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம் குறைப்பு மற்றும் ரொக்க இருப்பு விகிதம் ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், மக்களின் வாங்கும் திறனைக் குறையாமல் சீர்படுத்தி பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தவும் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புத்தாண்டில் வந்த புதிய மாற்றம்; ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
A Guide to Online Money Transactions to new rules

இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெட்டிக் கடை தொடங்கி, செல்போன் ரீசார்ஜ், மின்கட்டணம்,வீட்டு வாடகை என பலவற்றுக்கும் ஆன்லைன் மூலமே மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. 

இந்த நிலையில், யுபிஐ பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளின் நிறுவனங்களுக்கும், யுபிஐ பயனாளர்களுக்கும் புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2024 முதல் இந்திய ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. 

அதன்படி, ஓராண்டுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் யுபிஐ ஐடிக்களை செயலிழக்கச் செய்ய வேண்டுமென செயலிகளின் நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, ஆன்லைன் பரிவர்த்தனை மோசடிகளை குறைக்கும் வகையில் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் முதல் பரிவர்த்தனைக்கு 4 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் செயலிகள் மூலம் ரூ.2000க்கு மேல் தவறுதலாக ஒரு புதிய பயனாளருக்கு பணத்தை அனுப்பியிருந்தால் அதை நான்கு மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. மேலும், ஆன்லைன் வாலட்டுகள் போன்ற பிரீபெய்டு பேமண்ட் கருவிகள் மூலம் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு 1.1% பரிமாற்ற கட்டணம் விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பரிமாற்ற கட்டணம், வணிக பரிமாற்றங்களுக்கு மட்டுமே என்று தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் யுபிஐ ஏடிஎம்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வங்கி ஏடிஎம்மில் எவ்வாறு டெபிட் அட்டை மூலமாக பணம் எடுக்க முடியுமோ அது போல நமது செல்போனில் உள்ள யுபிஐ கியுஆஇ கோடை ஸ்கேன் செய்து அதில் பணம் எடுத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஐந்து விதிமுறைகளும் புத்தாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.