ramdas athawale urges Kashmir must be handed over, otherwise war

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும், இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும். சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளைப் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

Advertisment

இந்த நிலையில் காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றால் போரை அறிவிக்க வேண்டும் என்று இந்தியக் குடியரசு கட்சி தலைவரும்,மத்திய சமூக நீதித்துறை அமைச்சருமானராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் வசம் உள்ளவரை பயங்கரவாத நடவடிக்கைகள் தொடரத்தான் செய்யும்.

பயங்கரவாதிகள் மீண்டும், மீண்டும் ஒரே வழியாகத்தான் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். இதனால் பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தன்வசம் கொண்டு வரவேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக நாம் போரை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தான் அந்தப்பகுதியை விட்டு வெளியேறவில்லை எனில், இந்தியா போர் புரிய தயங்காது. மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளது என்று நான் எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.