"உங்கள் மனநிலை என்ன மனநிலை?" - கொந்தளித்த பிரதமர் மோடி...

narendra modi

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனையடுத்து இடைத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களைப் பிரதமர் மோடி மக்களவையில் அறிமுகம் செய்து வைக்க முயன்றபோது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்க முயன்றார். அப்போதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, "விவசாயிகளின் குழந்தைகள் சபையில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு சந்தர்ப்பம் இது. ஆனால், சிலர் அதை எதிர்க்கிறார்கள். எஸ்சி / எஸ்டி மற்றும் ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், பெண் அமைச்சர்களும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் பெருமையைக் காண முடியாத உங்கள் மனநிலை என்ன மனநிலை? அவர்களை (அமைச்சர்களை) சபையில் அறிமுகம் செய்வதற்கு அனுமதித்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன்" எனத் தெரிவித்தார்.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநிலங்களவை மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Narendra Modi RajyaSabha
இதையும் படியுங்கள்
Subscribe