Skip to main content

காதலி வீட்டில் கையும் களவுமாக பிடிபட்ட இளைஞர்... அவமானத்தில் எடுத்த அதிர்ச்சி முடிவு...

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

rajasthan youth runs to pakistan after got caught in lovers house

 

ராஜஸ்தான் மாநிலத்தில் தனது காதலி வீட்டில் இருக்கும்போது, அவரின் பெற்றோரிடம் சிக்கிக்கொண்ட இளைஞர், தன் பெற்றோருக்கு இந்தச் செயல் அவமானத்தை ஏற்படுத்திவிடும் என எடுத்த ஒரு முடிவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

 

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள சஜ்ஜன் கா பார் கிராமத்தில் வசித்து வந்த 20 வயது இளைஞர் ஜெமாரா ராம் மேக்வால். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 4-ம் தேதி இரவு, தனது காதலி வீட்டில் அவரது பெற்றோர் இல்லாதபோது, யாருக்கும் தெரியாமல் தனது காதலியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு ராம் மேக்வால் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் அவர் கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டுள்ளார். 

 

இந்த விவகாரத்தை ராம் மேக்வாலின் பெற்றோரிடம் கூறப்போவதாக அந்த பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன ராம் மேக்வால், அப்பெண்ணின் பெற்றோரிடம் பலமுறை மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால், அவர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாத அந்த இளைஞர், ஊரில் அனைவர் மத்தியிலும் அவமானமாகிவிடும் என எண்ணி, இரவோடு இரவாக பாகிஸ்தானில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்குத் தப்பியுள்ளார். 

 

அன்றைய தினம் நள்ளிரவே இந்திய எல்லையை ராம் மேக்வால் கடந்திருக்கிறார். மகனைக் காணவில்லை என அறிந்த அவரது பெற்றோர், தங்கள் மகன் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தச் சூழலில், பாகிஸ்தானில் உள்ள அந்த இளைஞரின் உறவினர்கள், அவரது பெற்றோரைத் தொடர்புகொண்டு, அவர்களது மகன் பாகிஸ்தானுக்கு வந்ததையும், அவரை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்ததையும் கூறியுள்ளனர். இதையடுத்து, ராம் மேக்வாலை விடுவிக்கும்படி பாகிஸ்தான் பாதுகாப்பு படையிடம் பிஎஸ்எஃப் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

அவமானத்திற்குப் பயந்து இளைஞர் பாகிஸ்தானுக்குச் செல்ல முடிவெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.