Skip to main content

முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் - தடை உத்தரவை திரும்ப பெற்ற ராஜஸ்தான் அரசு!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

cm mk stalin

 

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சூழலில், டெல்லி, ராஜஸ்தான், ஒடிஷா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் பட்டாசு விற்பனைக்கும், பட்டாசு வெடிப்பதற்கும் தடை விதித்தன. காற்று மாசு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டது.

 

இதனையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பட்டாசுக்கான தடையை நீக்குமாறு அந்த நான்கு மாநிலங்களின் முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், கரோனாவால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும், சிவகாசி பட்டாசு தொழிலை சார்ந்து சுமார் 8 லட்சம் பேர் உள்ளதையும் முதல்வர் மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

மேலும் "உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சில வகையான பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளது. காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எனவே சரியான கரணங்கள் இல்லாமல் ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கு தாங்கள் தடை விதித்திருப்பது சரியானதல்ல" என அந்த கடிதத்தில் தெரிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின், "பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை தங்களது மாநிலங்களில் அனுமதிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தியிருந்தார்.

 

இந்தநிலையில் தமிழ்நாடு முதல்வரின் கடிதத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் அரசு பசுமை பட்டாசுகளை வெடிப்பதற்கும், விற்பதற்குமான தடையை நீக்கியுள்ளது. இதுதொடர்பாக  ராஜஸ்தான் அரசு, தேசிய தலைநகர் பகுதிக்குள் வரும் இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் மற்றும் விற்கலாம் என அறிவித்துள்ளது.

 

udanpirape

 

மேலும், தீபாவளி, குருபுரப் உள்ளிட்ட பண்டிகைகளின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரையும், சாத் பண்டிகையின்போதும் காலை 6 - 8 மணி வரையும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின்போது இரவு 11.55 முதல் 12.30 வரையும் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் என ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தனது கடிதத்தையடுத்து பசுமை பட்டாசுகளுக்கான தடையை நீக்கிய ராஜஸ்தான் முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.