rajasthan governor accepts for assembly session

Advertisment

ராஜஸ்தானில் சட்டப்பேரவையைக் கூட்ட அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார்.

ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருவதால், அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சச்சின் பைலட்டை யாரும் எதிர்பாராத விதமாகக் கட்சியிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சி நீக்கியது. இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 19 பேரைத் தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முயன்று வருகிறார் அசோக் கெலாட். இதற்காக ஆளுநரிடம் அனுமதி கோரி இரண்டுமுறை கடிதம் கொடுத்த நிலையில், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அசோக் கெலாட், ஆளுநரின் நடவடிக்கை குறித்து பிரதமரிடம் முறையிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டப் பரிந்துரைத்த அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், கூட்டத்தொடரில் பங்கேற்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும், அவையில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.