sabarmati ashram

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள சபர்மதி ஆசிரமம், பழம்பெருமை வாய்ந்தது. மகாத்மா காந்தி 1917 முதல் 1930 வரை சுமார் 13 ஆண்டுகள் இந்த ஆசிரமத்தில்தான் வாழ்ந்தார். இந்நிலையில் இந்த ஆசிரமத்தை உலகத்தரம் வாய்ந்த நினைவிடமாக மேம்படுத்த 1200 கோடியில் திட்டம் ஒன்றை குஜராத் அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இந்த திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சபர்மதி ஆசிரமத்தை இடித்து அருங்காட்சியகத்தை அமைக்கும் குஜராத் அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. மேலும், இது தேவையற்றது. பிரதமர் மோடி இதில் தலையிட்டு, அரசின் முடிவை மறுபரிசீலனை செய்து, வரலாற்றுப்புகழ் கொண்ட ஆசிரமத்தைப் பாதுகாக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

மேலும், அவர் அந்த அறிக்கையில், "பார்வையாளர்கள் அந்த இடத்தின் எளிமையையும், தத்துவங்களையும் போற்றுவார்கள். அதனால்தான் அது ஆசிரமம் என அழைக்கப்படுகிறது. அது அருங்காட்சியகம் என அழைக்கப்படுவதற்கான இடம் அல்ல. ஆசிரமத்தின் நல்லொழுக்கத்தையும், கண்ணியத்தையும் அழிப்பது தேசத் தந்தைக்கு செய்யும் அவமரியாதை. காந்திஜிக்கு தொடர்புடைய அனைத்தையும் மாற்றவேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது" எனவும் கூறியுள்ளார்.