
இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஒருமொழி கொள்கையிலும் தனது உறுதியான நிலைப்பாட்டைத் தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், அங்கு தொடர்ந்து மொழி தொடர்பான சர்ச்சை நிகழ்ந்து வருகிறது.
இதற்கிடையில், மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசு அமல்படுத்துவதாக அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம், வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, 1ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை ஆங்கிலம், மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டிருந்தது மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் கூறி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துப் பேசியிருந்தார். புதிய கல்விக் கொள்கை மூலம் மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிக்கும் நடவடிக்கைக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக மாநிலத்தில் பெரும் சர்ச்சையானதால், மகாராஷ்டிராவில் மராத்தி கட்டாயமாகவே உள்ளது என்றும், இந்தி மொழி திணிக்கப்படவில்லை என்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென பல்டி அடித்தார். அதனை தொடர்ந்து, பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கண்டிப்பாக இந்தி மொழி இருக்கும் என்ற முடிவை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் இருமொழி கொள்கையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்த வேண்டும் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தாதாஜி பூஷேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ராஜ் தாக்கரே எழுதிய அந்த கடிதத்தில், ‘இந்தி உட்பட மூன்று மொழிகளைக் கற்பிக்க வேண்டும் என்ற முந்தைய முடிவின் அடிப்படையில் இந்தி மொழிப் பாடப்புத்தகங்களை அச்சிடும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்று எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இப்போது புத்தகங்கள் அச்சிட்டப்பட்ட பிறகு, அரசு தனது சொந்த முடிவில் இருந்து பின்வாங்கத் திட்டமிட்டுள்ளதா? அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று நான் கருதுகிறேன், ஆனால் இது போன்று ஏதாவது நடந்தால் நவநிர்மாண் சேனா தொடங்கும் போராட்டத்திற்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். நாட்டில் உள்ள பல மாநிலங்கள், முதல் வகுப்பில் இருந்து இருமொழிகளை ஏற்றுக்கொண்டு இந்தி திணிப்பை நிராகரித்துள்ளன. அதற்கு காரணம், அவர்களின் மொழியியல் அடையாளம். நீங்களும் உங்கள் சக அமைச்சரவை உறுப்பினர்கள் பிறப்பால் மராத்தியர்கள். இந்தியை எதிர்க்கும் மற்ற மாநிலத் தலைவர்களைப் போல் செயல்பட்டு நீங்கள் எப்போது உங்களுடைய மொழி அடையாளத்தை பாதுகாக்க போகிறீர்கள்?. அதை எவ்வாறு வளர்ப்பீர்கள்?. மற்ற மாநிலங்களைப் போல, இந்த அரசாங்கமும் அதே வலுவான அடையாள உணர்வை காட்ட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பொது உணர்வு தீவிரமாக இருந்ததால் தான், இந்தி மூன்றாவது மொழியாக கட்டாயமாக்கப்படாது என்று அரசாங்கம் அறிவித்தது. அடிப்படையில், இந்தி ஒரு தேசிய மொழி அல்ல. நாட்டின் பிற மாநிலங்களில் பேசப்படும் மொழிகளில் ஒன்று தான் அது. அதை கட்டாயமாக்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்தப்படுகிறது. அரசாங்கம் சில அழுத்தங்களில் கீழ் ஏன் தடுமாறியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. முதல் வகுப்பில் இருந்து மூன்று மொழிகளைக் கற்க குழந்தைகளை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்?. மகாராஷ்டிரா மாநில கல்வி வாரிய பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில், முதல் வகுப்பில் இருந்து இரு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும் என்று நீங்கள் அறிவித்தீர்கள். ஆனால், இந்த அறிவிப்புகளை எழுத்துப்பூர்வ உத்தரவை ஏன் இன்னும் வெளியிடவில்லை?. எனவே, முதல் வகுப்பிலிருந்து மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும் என்றும், இந்தி மூன்றாம் மொழியாக கட்டாயமாக்கப்படாது என்றும் எழுத்துப்பூர்வ உத்தரவை விரைவில் பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.