Skip to main content

“இந்திய நாட்டில் பாகுபாடும் வன்முறையும் அதிகரித்து வருகிறது”- ஐரோப்பாவில் ராகுல் தாக்கு

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Rahul Gandhi spoke in Europe about India and Prime Minister narendra Modi

 

இந்தியா தலைமையில் ஜி20 மாநாடு டெல்லியில் இன்றும்(9.9.2023), நாளையும்(10.9.2023) நடைபெறும் நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒரு வார காலம் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ராகுல் காந்தி வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஐரோப்பிய வாழ் இந்தியர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

 

இந்த நிலையில் நேற்று, பெல்ஜியம், பிரஸல்ஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் போக்கில் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளும் என நான் நினைக்கிறேன். மேலும், நாம் ரஷ்யா நாட்டுடன் தொடர்பு வைத்துள்ளோம். அதனால், தற்போதைய அரசு முன்வைத்துள்ள நிலைப்பாட்டில் இருந்து எதிர்க்கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்காது எனவும் நினைக்கிறேன்.

 

ஒருங்கிணைந்த சூழல் மூலம் உற்பத்தியை திறம்பட மேற்கொள்ள முடியும் என்பதை சீனர்கள் நிரூபித்துவிட்டனர். நீங்கள் எப்போது மக்களுக்கான சுதந்திரம் அளிக்கவில்லையோ, அந்த இடத்தில் அவர்களின் அரசியல் சுதந்திரத்தை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள். ஆனால், நீங்களே அவர்களுக்கு செழிப்பை தருகிறீர்கள். ஜனநாயக அடிப்படையில் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்துடன் சேர்த்து ஒரு மாற்று பார்வையை வழங்குவற்கும் உற்பத்தி செய்வதும் எங்களுக்கு சவாலாக இருக்கிறது. இதுபோல, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா நாடுகள் இடையே நிறைய ஒத்துழைப்புகள் மேற்கொள்வதில் நமது கவனம் இருக்க வேண்டும்.  பின், நம்மால் எப்படி சீனாவின் உற்பத்தி மாதிரிக்கு மாற்றாக ஒன்றை உருவாக்க முடியும். இதுபோன்ற போட்டித்தன்மையான பார்வை நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும்” என்றார்.

 

இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பேசிய ராகுல் காந்தி, “பெல்ஜியமில் உள்ள இந்தியாவின் புலம்பெயர் மக்களைச் சந்திப்பதும் அவர்களுடன் உரையாடுவதும். அவர்கள் பெல்ஜியமில் எப்படி இயங்கி வருகிறார்கள் என்பதனை புரிந்துகொள்வது இந்த பயணத்தின் நோக்கம். அடுத்ததாக, இங்குள்ள அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, இந்தியாவை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள். மேலும், நமது இரு நாடுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வந்துள்ளேன். இந்திய நாட்டில் பாகுபாடும் வன்முறையும் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் சிறுபான்மையினர், தலித் சமூகங்கள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்” என விமர்சித்தார்.

 

பின்னர் ராகுல் காந்தியிடம், ஜி20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை அழைக்கவில்லையே என்கிற கேள்வி எழுப்பப்பட்டபோது, “இதில் முரண்பட என்ன இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவரை அழைக்கப் போவதில்லை என அவர்கள் முடிவு செய்துள்ளனர். இத்தகைய செயல் நமக்கு சொல்ல வருவது, இந்தியாவின் 60 சதவீத மக்கள் தொகையின் தலைவரை அவர்கள் மதிக்கவில்லை என்பதே ஆகும். இதுபோன்ற செயல்களை ஏன் இவர்கள் செய்கிறார்கள். இதற்கான தேவை என்ன என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

 

தொடர்ந்து, பாரத் பெயர் மாற்றம் குறித்தும் கேள்விக்கு, “எங்கள் அரசியலமைப்பில் இருக்கும் பெயரை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதில், 'இந்தியா, அதுவே பாரதம்' என உள்ளது. அதுவே எனக்கு சரியாகப்படுகிறது. நாங்கள் எங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' எனப் பெயர் வைத்ததற்கு காரணம், அது எங்களின் கூட்டணியின் சிந்தனையை பிரதிபலிக்கிறது. எங்களை நாங்கள் இந்தியாவின் குரலாகவே பார்க்கிறோம். ஆனால், நாட்டின் பெயரையே மாற்ற நினைக்கும் அளவுக்கு, பிரதமரை இந்த பெயர் கலங்கடித்துவிட்டது. மேலும், நான் ஒவ்வொரு முறையும் அதானி மற்றும் சலுகை சார்ந்த முதலாளித்துவ பிரச்சினையை எழுப்புகிறோம். ஆனால், பிரதமர் அதிரடியாக அதனைத் திசை திருப்புவது போன்று வெளிப்படுவது என்பதும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது” என்றார்.

 

மேலும், இந்தியாவில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் போன்ற செயல்களால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில்துறையில் சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன” என்றார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி அடுத்தாக பாரீஸ் சென்று பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.