Skip to main content

திறனற்ற பிரதமர் - மோடியை விமர்சித்த ராகுல்!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020
rahul gandhi

 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக சென்று, வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட இரண்டு கோடி கையெழுத்துக்களை, குடியரசுத் தலைவரிடம் தர முயன்றனர்.

 

ராகுல் காந்தி தலைமையில், அனுமதியின்றி பேரணி நடைபெற்றதால் அதனை தடுத்து நிறுத்திய போலீஸார், காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தனர். குடியரசுத் தலைவரை சந்திக்க ஏற்கனவே அனுமதி பெற்ற ராகுல் காந்தி அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

 

குடியரசுத் தலைவரை சந்தித்து, வேளாண் சட்டங்களுக்கு எதிரான இரண்டு கோடி கையெழுத்துக்களை அளித்த ராகுல் காந்தி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படவேண்டும் என வலியுறுத்தினார். பின்பு  பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என குறிப்பிட்டார்.
  

 

இதுகுறித்து அவர், "இந்த விவசாயிகள் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் வரை வீடு செல்ல மாட்டார்கள் என்பதை பிரதமரிடம் கூற விரும்புகிறேன். பிரதமர் மோடி முதலாளிகளுக்காக பணம் சேர்க்கிறார். அவருக்கு எதிராக நிற்க முயற்சிப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் பயங்கரவாதி என்று அழைக்கப்படுவர். அது விவசாயிகளாக இருந்தாலும்  தொழிலாளர்களாக இருந்தாலும், ( ஆர்.எஸ்.எஸ் தலைவர்) மோகன் பகவத்தாக இருந்தாலும் சரி.

 

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. இது உங்கள் கற்பனையில் இருக்கலாம், ஆனால் உண்மையில் இல்லை.சீனா இன்னும் எல்லையில் உள்ளது. இது இந்திய நிலத்தின் ஆயிரக்கணக்கான கி.மீ. பிரதமர் ஏன் இதைப் பற்றி பேசவில்லை, அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்?. இந்த நாட்டின் இளைஞர்கள் மற்றும் அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரதமர் ஒரு திறமையற்ற மனிதர், அவருக்கு எதுவும் தெரியாது. எல்லாவற்றையும் புரிந்துவைத்துள்ள 3-4 பேர் சார்பாக ஆட்சியை நடத்துகிறார்" என பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்