Skip to main content

“பிரதமர் மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க கவனம் செலுத்த வேண்டும்” - ராகுல் வலியுறுத்தல்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

Rahul Gandhi said  PMshould focus on Manipur issue

 

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கும் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. முன்னதாக மணிப்பூர் கலவரம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மாநிலம் மணிப்பூர் எரிகிறது. தயவு செய்து உதவுங்கள்” எனப் பதிவிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை டேக் செய்திருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், “இந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன. இவை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தவறான புரிதல்களால் நடந்துள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றார்.  மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த கலவரக்காரர்களைக் கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

 

இந்த நிலையில் பிரதமர் மோடி மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவது கவலையளிக்கிறது. அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுப்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும். மணிப்பூர் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்