Rahul Gandhi retorts says Amit Shah doesn't know history

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, கடந்த 5 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மீது விவாதம் நடந்தது. 2 நாட்களாக நடந்த இந்த விவாதத்தில் பல்வேறு உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைப் பேசி வருகின்றனர்.

Advertisment

இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 6 ஆம் தேதி பதில் அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “1947 ஆம் ஆண்டு நம் நாட்டு ராணுவம், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பை அடைந்தபோதும், நேரு திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார். இதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. 3 நாட்கள் கழித்து போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் நம்மிடம் வந்திருக்கும். ‘போர் நிறுத்தம் அறிவித்தது தவறுதான்’ என்று பின்னாளில் நேருவே தெரிவித்தார். அது நேருவின் தவறு அல்ல பிழை.

Advertisment

மற்றொரு பிழை, காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.சபைக்கு எடுத்துச் சென்றது. நமது பெரும்பகுதியை நாம் இழந்துவிட்டோம். இது வரலாற்று பிழை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ஒரு தற்காலிக ஏற்பாடுதான். எனவே, அந்த பிரிவை நீக்கி தான் பிரச்சனையை தீர்க்க முடியும். அதை நீக்குவதற்கு உங்களுக்கு தைரியம் இல்லை. நரேந்திர மோடிக்கு தைரியம் இருந்ததால் அந்த பிரிவை நீக்கினார்” என்று பேசியிருந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. அந்த வகையில், அமித்ஷா வரலாறு தெரியாதவர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்று (12-12-23) செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “ஜவஹர்லால் நேரு இந்த நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். அமித்ஷாவின் பேச்சு, அவருக்கு வரலாறு தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. அவருக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்க மாட்டேன். வரலாற்றை மாற்றிஎழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்தான் அமித்ஷா.

Advertisment

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதை திசை திருப்பவே ஜவஹர்லால் நேரு குறித்து அமித்ஷா விமர்சித்து வருகிறார். தற்போதைய சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படை விஷயம். நாட்டில் உள்ள செல்வங்கள் அனைத்தும் எங்கே யாருக்கு செல்கின்றன? ஆனால், இந்த விஷயம் குறித்து பேச அவர்கள் விரும்பமாட்டார்கள். ஏனென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அவர்களுக்கு பயம் இருக்கிறது” என்று கூறினார்.