சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட ராகுல்காந்தி எம்.பி., அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, கார் மூலம் ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, வழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கிக் காயத்துடன் போராடிக் கொண்டிருந்தார்.
இதனையறிந்த ராகுல்காந்தி எம்.பி., காரில் இருந்து கீழே இறங்கிச் சென்று உதவியதோடு, தனது காண்வாயில் வந்த ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனிடையே, காயமடைந்த இளைஞர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.