Rahul Gandhi MP Prosecution on

Advertisment

நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய உள்துறை அமித்ஷா பேசியது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று (19.12.2024) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.

அதே சமயம் பாஜகவினரும் போட்டி போராட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தனது மண்டை உடைந்ததாக பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பாஜகவைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான முகேஷ் ராஜ்புத்துக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆர்.எம்.எல். மருத்துவமனையின் அவசர சிகிசை பிரிபில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது தொடர்பாக பாஜகவினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பாஜக எம்.பி.க்கள் அனுராக் தாகூர், மன்சூர் இஸ்துராஜ், ஹேமந்த் ஜோஷி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு டெல்லி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

அதே சமயம் அமித்ஷாவுக்கு எதிரான போராட்டத்தை திசைதிருப்பவே ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் எம்பிக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் மீது அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்வி காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.