Rahul Gandhi became mp again

Advertisment

ராகுல்காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது.

ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு எம்.பி பதவி எப்போது வழங்கப்படும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ராகுல் காந்தியைஎம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்திருந்த உத்தரவைத் திரும்பப் பெறுவதாக மக்களவைச் செயலகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத்தொடர்ந்து, 136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ராகுல் காந்தியின்எம்.பி பதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.