Advertisment

ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு; குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Rahul Gandhi Appeal Case Supreme Court Notice to Gujarat Gov

Advertisment

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனைக்குத் தடை விதித்து உத்தரவிடக் கோரி ராகுல் காந்தி சார்பில் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது எனத் தெரிவித்து ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அதிகமானது. சரியான முறையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரத்து செய்யவேண்டும் எனத் தெரிவித்து இருந்தார். மேலும் தனது மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என ராகுல் காந்தி முறையிட்டு இருந்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க முடியவில்லை. மேலும் ராகுல் காந்தி கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தனது தொகுதி பணிகளை செய்ய முடியவில்லை என ராகுல் காந்தி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு மீது பதிலளிக்க எதிர் மனுதாரர்களான குஜராத் அரசுக்கும், அவதூறு வழக்கை தொடர்ந்த பூர்னேஷ் மோடிக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ராகுல் காந்தி மனு மீது 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Gujarat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe