ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Advertisment

rahul gandhi about p.chidambaram bail

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21- ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

Advertisment

இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ப.சிதம்பரம் சாட்சியங்களை கலைக்கும் வகையில் எந்த செயலும் செய்யக்கூடாது எனவும், இந்த வழக்கு தொடர்பாக அவர் பத்திரிகை நேர்காணல்களை வழங்கவோ அல்லது பகிரங்க அறிக்கைகளை வெளியிடவோ கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. இதனையடுத்து 106 நாட்களுக்கு பின்னர் ப.சிதம்பரம் சிறையிலிருந்து விடுதலையாக உள்ளார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பழிவாங்கும் செயல், அவரைக் காயப்படுத்த வேண்டும் என்பதற்காகச் செய்த செயல். சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். நியாயமான விசாரணையின் மூலம் சிதம்பரம் தன்னுடைய குற்றமற்ற தன்மையை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார்.

Advertisment