ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந் நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிக கூட்டம் காரணமாக பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், அதனால் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் கொண்டு வரப்பட்டு பாதிக்கப்பட்ட 24பக்தர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, ஒடிசா மாநில அமைச்சர் முகேஷ் மஹாலிங் கூறுகையில், “அதிக கூட்டம் காரணமாக பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டனர். இதனையடுத்து மீட்புக் குழுவினர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கோயில் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் நான் இங்கே வந்திருக்கிறேன். தேவைப்படுபவர்களுக்கு சரியான சுகாதாரப் பராமரிப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்ய நான் மருத்துவமனைக்குச் செல்வேன்” எனக் கூறியுள்ளார்.