ADVERTISEMENT

பச்சை மிளகாய் திருடர்களுக்கு கட்டி வைத்து தண்டனை! - ஒரு கிராமத்தின் ஆவேசம்!

03:51 PM Nov 29, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடகாவில் பச்சை மிளகாய் திருடிய இரண்டு இளைஞர்களைப் பிடித்து, தர்ம அடி கொடுத்து, தூணில் கட்டி வைத்த கிராம மக்கள், கடும் தண்டனை கொடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளையும் பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு, அதிக விலையும் கிடைத்து வருவதால், விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்தப் பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வரும் நிலையில், லக்ஷ்மேஷ்வர் தாலுகாவில் உள்ள யட்டினஹள்ளி கிராமத்தில், விளை நிலங்களுக்குள் புகுந்து பச்சை மிளகாய் திருடிய இரண்டு இளைஞர்களை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்து, தர்ம அடி கொடுத்ததுடன், தூணில் கட்டி வைத்து கடும் தண்டனை வழங்கியிருக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில், பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில், அவ்வப்போது அளவு குறைந்து காணாமல் போய் இருப்பது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்ததால், நிலங்களைக் கண்காணித்து காவல் காத்து வந்தனர்.

திடீரென அதிகாலை வேளையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சிவன் மற்றும் மஞ்சுநாத் ஆகிய இரண்டு இளைஞர்கள் விளை நிலங்களில் புகுந்து, செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களைப் பறித்துக்கொண்டு, அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு, திருடிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, காவலுக்கு இருந்த விவசாயிகளில் சிலர், அந்த இரண்டு இளைஞர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், அவர்கள் திருடிய மிளகாய்களுடன், இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில், அவர்கள் திருடிய மிளகாய்களுடன், இரண்டு பேரில் ஒருவரைக் கட்டி வைத்து, மற்றொருவரை கட்டப்பட்டவனின் தோளில் மீது ஏற்றி நிறுத்திவைத்து, கடுமையாகத் தண்டித்துள்ளனர். இதன் பின்னர், இத்தகவல் அறிந்து அங்கு வந்த கிராம முக்கியஸ்தர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT