/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puducherry 45896.jpg)
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் கொட்டா ரமேஷ் (40 வயது). இவர் இன்று (07/06/2020) காலை வழக்கம்போல் தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பம் பகுதியில் நடைபயற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ரமேஷ் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டக்குப்பம் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதிகாலை நடந்த கொலை சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ரமேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. முன் விரோதம் காரணமாக பழிக்கு பழி வாங்கும் கொலையாக இது இருக்குமோ? என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலை சம்பவத்தால் புதுச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து புதுச்சேரியில் 5 கொலைகள் நடைபெற்றுள்ளதால், அம்மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us