Skip to main content

புதுச்சேரி சட்டசபை-  பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடக்கம்! வழக்கம் போல் அ.தி.மு.க வெளிநடப்பு!

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

 2019-20 நிதி ஆண்டுக்கு  புதுச்சேரி பட்ஜெட்டில் ரூ.8425 கோடிக்கு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையிலும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலும் திட்டக்குழு அறிக்கை மூலம், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மத்திய அரசு நிதி ஒப்புதல் அளித்தது. அதையடுத்து நேற்று ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. 
 

இதில் கலந்து கொண்டு பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, “புதுச்சேரி அரசு  ஏழை, அடித்தட்டு மக்கள் நலனுக்காக எடுத்துள்ள முயற்சிகள், செயல்படுத்தும் திட்டங்கள் திருப்தியை ஏற்படுத்துகிறது. நிதி ஆதாரங்கள் குறைவாக இருப்பதால் செலவினங்களை அதற்கேற்ப சீர் செய்து கொள்ள வேண்டிய நிலையில் அரசு இருக்கிறது. இது போன்ற சூழலில் கடந்த காலங்களில் பெறப்பட்ட கடன் ரூ.351 கோடியை அரசு திருப்பி செலுத்தியுள்ளது. 
 

puducherry union budget 2019-20 session start yesterday governor kiranbedi speech


 

வேளாண்மை துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், வேளாண் ஆராய்ச்சி உள்ளடக்கிய 22 திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ 9.48 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாண்லே ஆலையை ரூ.34 கோடி செலவில் நவீனப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. கால்நடை மருத்துவ கல்லூரியின் வளர்ச்சிக்கு ரூ.12 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளதோடு, 60 இளங்கலை பாடப்பிரிவு (பிவிஎஸ்சி) இடங்கள் 80 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. 2018-19- ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை உள்பட வணிக வரித்துறை மூலமாக ரூ.2131 கோடி  வருவாய் கிடைத்துள்ளது. 

இது முந்தைய ஆண்டை விட ரூ. 272 கோடி கூடுதல் ஆகும். காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் சைபர் குற்றங்களில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாப்பதற்காக இணையதள தடயவியல் ஆய்வக பயிற்சி மையத்தை ஏற்படுத்த ரூ 1.48 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கியுள்ளது. நிர்வாக காரணங்கள், போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அனைத்து துறையிலும் சரியான திட்டமிடுதலால் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.

நிதி ஆதாரங்கள் முறையாக  செலவு செய்யப்படுவதால் மாநில நிதி நிலைமை சீராக உள்ளது. மக்களின் வளர்ச்சி மற்றும் நலன்களை பாதுகாக்க பல்வேறு  மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இந்த அரசு உறுதியுடன் முன்னெடுத்து செல்வதால் புதுச்சேரியின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் புதிய உச்சத்திற்கு செல்லும்” என்றார்.
 

puducherry union budget 2019-20 session start yesterday governor kiranbedi speech


 

இதனிடையே ‘ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ள எந்தவித அம்சங்களையும் நிறைவேற்றவில்லை’ என குற்றம்சாட்டிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், அசனா,பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்

 
இந்நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை 11 நாட்கள் நடத்த சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏக்கள் அன்பழகன், சிவா, ஜெயபால், தலைமை செயலர் அஸ்வனிகுமார், நிதி செயலர் அன்பரசு, சட்டத்துறை செயலர் ஜூலியட் புஷ்பா, சட்டசபை செயலர் வின்சென்ட்ராயர் ஆகியோர் அலுவல் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதன்படி அடுத்த மாதம் 7-ஆம் தேதிவரை மொத்தம் 11 நாட்கள் சட்டசபையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் குறைந்த நாட்களே சட்டசபை நடத்தப்படுவதால், மதிய நேரத்திலும் சபையை நடத்தி நாட்களை ஈடுகட்ட எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். இதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். வரும் 28-ஆம் தேதி நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயாணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.