Skip to main content

புதுச்சேரியில் கந்து வட்டி கும்பல் பைனான்சியரை கடத்தித் தாக்குதல்...10 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்!

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

புதுச்சேரி லாஸ்பேட்டை மகாவீர் நகர் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் சபரி (எ) சபரிநாதன்(வயது 37). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த தீபன் என்பவரிடம் ரூ.9 லட்சம் கடனாக வாங்கி இருந்தார். அதற்கான வட்டியை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தனது தொழிலுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் தேவைப்பட்டது. உடனே அவர் தீபனை தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். அவர் கூறிய படி பணத்தை வாங்க வேல்ராம் பட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு தீபனுடன் நின்று கொண்டிருந்த  நண்பர்கள் சபரியை பார்த்த உடன், ‘இவரிடம் பணம் கொடுத்தால் திரும்ப வாங்க முடியாது. இவர் ஒரு மோசடி பேர் வழி’ என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தீபன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சபரியை அங்குள்ள ஒரு கேபிள் டி.வி. அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். தான் ஏற்கனவே கொடுத்த பணம் ரூ.9 லட்சத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு கத்தி, தடி, கேபிள் ஒயர் ஆகியவற்றை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.

 

pondicherry

 

இதனால் அதிர்ச்சியடைந்த சபரி தனது செல்போன் மூலம் தனது தொழில் பார்ட்னர் ராஜா என்கிற ராஜேந்திரனை  செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் உடனடியாக கொண்டு வந்து தன்னை உயிருடன் காப்பாற்றுமாறு கூறியுள்ளார். அப்போது சபரி தாக்குதலுக்கு உள்ளாகி அலறி துடிக்கும் சத்தம் கேட்டது. உடனே ராஜேந்திரன் அவரிடம், ‘எங்கு இருக்கிறாய்?’ என்று கேட்பதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராஜேந்திரன் இது குறித்து சபரியின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். மேலும் லாஸ்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் செய்தார்.

 

இதனை தொடர்ந்து லாஸ்பேட்டை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சபரி பேசிய செல்போன் எண்ணில் மீண்டும் தொடர்பு கொண்டு, ‘பணத்தை எங்கு கொண்டு வர வேண்டும்?’  என கேட்டனர். அந்த கும்பல் பணத்தை 100 அடி ரோட்டில் உள்ள பாலத்திற்கு கொண்டு வரும்படி கூறியது. அவர்கள் கூறியது போல் பணத்தை அங்கு கொண்டு சென்றனர்.  பணம் கேட்டு மிரட்டிய கும்பலும் அங்கு வந்தது. அப்போது போலீசார் சாதாரண உடையில் நடமாடுவதை கண்டவுடன் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. பின்னர் அந்த கும்பல் சபரிநாதனை மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தின் அருகே சபரியை இறக்கி விட்டு அந்த கும்பல் தலைமறைவாகியது. அப்போது ‘போலீசாரிடம் கொடுக்கல், வாங்கல் தகராறில் லேசான அடிதடி என்று கூற வேண்டும். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர்.

 

pondy police

 

 

 

உயிர் தப்பிய சபரி முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினார். பின்னர் அது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சபரியை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து  டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின் பேரில்  முதலியார்பேட்டை போலீசார் சபரிநாதன் மீது தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்