Skip to main content

தற்கொலை மிரட்டல் விடுத்த பொதுப்பணித்துறையினர்; புதுச்சேரியில் பரபரப்பு

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

puducherry public works department job permanent incident 

 

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் வவூச்சர் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 1,311 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்து தீயணைப்பு நிலையம் அருகே உள்ள குடோனில் அடைத்தனர். பின்னர் மதியம் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த முதலமைச்சர் தொகுதியை சேர்ந்த 700 பேர் மருத்துவமனை மேல் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தியதையடுத்து அன்றே பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் ஆணை வெளியிட்டார். அதேபோல் அனைத்து தொகுதியில் பணிபுரியும் பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், தனது தொகுதி ஊழியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்த முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்தும் சோனாம்பாளையம் பகுதியில் உள்ள 80 அடி உயர் நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறிய 100 பேரும் அதன் கீழே சாலையில் 100 பேரும் என கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஊழியர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதனை ஏற்க மறுத்து வாட்டர் டேங்க் மேலே நின்று ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு இருந்தனர். இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தும், விரட்டிப் பிடித்தும்,  போராட்டக்காரர்களை தரதரவென்று இழுத்துச் சென்றனர். மேலும் கைதுக்கு பயந்து ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் போராட்டக் களமே சிறிது நேரத்தில் போர்க்களமாக மாறியது.

 

puducherry public works department job permanent incident 

அதேசமயம் நீர்த்தேக்க தொட்டியின் மீது இருந்த ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், நேரு, அனிபால் கென்னடி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து 2 மணி நேரமாக நீர்த்தேக்க தொட்டியின் மீது போராட்டம் நடத்தியவர்கள் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தனர். பொதுப்பணித்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக சோனாம்பாளையம் பகுதியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.