Skip to main content

'பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு' - துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி உத்தரவு!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

puducherry petrol, diesel price tax reduced governor order

 

புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த பிப்ரவரி 22- ஆம் தேதி விலகியது. மேலும் தனது மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் கடிதங்களை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து நாராயணசாமி வழங்கினார். அதைத் தொடர்ந்து அமைச்சரவையின் ராஜினாமாவை துணைநிலை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். 

 

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமைக் கோராததால், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

 

அதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தது. மேலும், அதற்கான கோப்புகளைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. இந்த நிலையில் நேற்று (25/02/2021) மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைப்பதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அரசாணையைத் தொடர்ந்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி உடனடியாக அமல்படுத்தப்பட்டது. 

 

இந்த நிலையில், புதுச்சேரியில் உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2% குறைக்க, அம்மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். வாட் வரி குறைப்பில் புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.40 குறைய வாய்ப்புள்ளது. 

 

புதுச்சேரியில் இன்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய் 86.08 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 92.55 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Tamil Nadu Govt announced Ex-Servicemen Tax Concession

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.  இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.