Skip to main content

விலகிச் சென்ற கூட்டாளி; கொலை செய்த ரவுடி கும்பல் 

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

puducherry pagur incident police strared investivation

 

புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்த அரங்கனூர் சுடுகாட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.எஸ்.பி தீபிகா, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கணேசன், சப்- இன்ஸ்பெக்டர்கள்  நந்தகுமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கீழ் குமாரமங்கலம் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தமிழ் என்கிற தமிழரசன் (வயது 39) என்பதும் பிளம்பர் வேலை செய்து வந்த அவர் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

 

அதையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் தமிழரசன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் கொலை செய்யப்பட்ட தமிழரசன் ஏற்கனவே ரவுடி கும்பலுடன் பழகி, பின்னர் அவர்களுடன் பிரச்சனை ஏற்படவே அங்கிருந்து விலகி மற்றொரு ரவுடி கும்பலில் சேர்ந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த விரோதம் நாளுக்கு நாள் வலுத்து வந்த நிலையில், அரங்கனூர் பகுதி கிராமத்தில் நடந்த குத்தகை கூட்டத்தில் அதே  ஊரை சேர்ந்த இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பலுக்கு தமிழரசன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த தமிழரசனை அப்பகுதியை சேர்ந்த கூட்டாளிகள் மூன்று பேர் காணும் பொங்கல் கொண்டாட வெளியே அழைத்துச் சென்று, அங்கு அவரை அடித்து கொலை செய்துவிட்டு அரங்கனூர் சுடுகாட்டில் வீசி சென்றது தெரியவந்தது.

 

இது தொடர்பாக பாகூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் கரிக்கலாம்பாக்கம் ரவுடி கும்பலில்  இருந்த தமிழரசன் சமீபத்தில் அந்த கும்பலில் இருந்து விலகி எதிர் தரப்பில் இணைந்துள்ளார். இதனால்  கரிக்கலாம்பாக்கம் ரவுடி கும்பல் அவரை கடத்தி சென்று கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழரசனின் தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து  புகாரை பெற்ற போலீசார் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி தாடி அய்யனார் (வயது 34),  அர்ஜுனன் என்கிற ஆனந்த்,  கொத்துக்கா ஏழுமலை மற்றும் கடலூர் மாவட்டம் சிங்கிரி கோவில் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, சந்தோஷ், கார்த்திகேயன், புதுக்கடையை சேர்ந்த விஜயகுமார், வேல்முருகன், கீழ் குமார மங்கலத்தை சேர்ந்த தவமணி உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கொலை கும்பலை மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.