Skip to main content

தற்கொலை செய்து கொண்ட காதலியின் உடலை பார்க்க வந்த காதலன் படுகொலை!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ராகவன் (22) ஐதராபாத்தில் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். ராகவன் அதே ஊரைச் சேர்ந்த நர்சிங் படித்து வந்த அருணா (19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். 


இந்த விவகாரம் அருணாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அருணாவை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அருணா கடந்த 22- ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதையடுத்து அருணாவின் பெற்றோர்கள் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் தங்கள் மகள் சாவில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  

PUDUCHERRY LOVERS INCIDENT POLICE INVESTIGATION

அதே சமயம் அருணாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அருணா இறந்த தகவல் ராகவனுக்கு தெரிந்தால் அவர் உடனடியாக ஊருக்கு திரும்பினார்.


இந்நிலையில் நேற்று (24/02/2020) மாலை ராகவன் தனது நண்பர்களான புதுச்சேரி குருசுகுப்பம் சஞ்சய், சாமிப்பிள்ளை தோட்டம் சிவநேசன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார். கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் அவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்த போது மூன்று பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. 


அவர்கள் ராகவனை மட்டும் கடத்தி செல்ல முயன்றனர். அப்போது அவரது நண்பர்கள் தடுத்தனர். இதனால் கோபமடைந்த அந்த கும்பல் சிவநேசனை அரிவாளால் வெட்டியது. இதனால் சிவனேசனும், சஞ்சயும் அலறி அடித்து கொண்டு ஓடினர். அப்போது ராகவனை மட்டும் அந்த கும்பல் பைக்கில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றது. அதனைத் தொடர்ந்து கோட்டைமேடு தனியார் பஞ்சு கம்பெனி அருகே ராகவனை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. மேலும் அந்த கும்பல் ராகவனின் முகம் மற்றும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.


அப்போது அந்த பகுதியில் ஏதோ எரிகிறதே என அங்கிருந்தவர்கள் வந்து பார்த்தபோது ராகவன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு, எரிந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கனகசெட்டிக்குளத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  


இதையடுத்து தகவலறிந்த ராகவனின் உறவினர்கள் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் திரண்டு கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.  ராகவன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரது காதலி இறந்த நிலையில் அவரும் கொலை செய்யப்பட்டதால் இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த கொலை சம்பவத்தால் புதுச்சேரி மற்றும் கோட்டக்குப்பம் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.