Skip to main content

புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம்! பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 1311 வவுச்சர் ஊழியர்களுக்கு 30 நாட்கள் பணி வழங்க வேண்டும், மத்திய அரசின் சட்டக்கூலியை நாள் ஒன்றுக்கு ரூ. 648 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், சீனியாரிட்டி அடிப்படையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், 10 மாத நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25- ஆம் தேதி முதல் அரசு பணியாளர் நல கூட்டமைப்பின் சார்பில் தொடர் வேலைநிறுத்தப் பட்டினிப்போராட்டம் சுதேசி மில் அருகில் நடைபெற்று வருகிறது. ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழர் களம், மக்கள் வாழ்வுரிமை இயக்கம், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. 
 

3- ஆவது நாளாக தொடர்ந்துள்ள வவுச்சர் ஊழியர்களின் போராட்டத்தில் புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் நிர்வாகிகள் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவளித்து பேசினார்கள். போராட்டத்தில் இரா. சிவா எம்.எல்.ஏ பேசியதாவது :
 

puducherry govt employees strike


ஒரு அரசாங்கம் அரசுத்துறைகளில் வைக்கப்படும் ஆட்களை அடுத்துவருகின்ற அரசுகள் சுயநலத்துடன், அரசியல் ஆதாயத்திற்காக அந்த ஆட்களை வெளியேற்றிவிடுவார்கள். ஆனால் ஆட்களை வேலைக்கு வைத்த அரசாங்கமே அவர்களைப்பற்றி கவலைப்படாமல் உள்ளது இங்குதான். இந்த விசித்திரமெல்லாம் புதுச்சேரியில் தான் அரங்கேறும். இந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றுகின்ற வகையில் இந்த அரசும், ஆட்சியாளர்களும் முயற்சி மேற்கொள்கிறார்களா என்றால் இல்லை. இன்னும் ஆயிரம் பேரை காவு வாங்கும் வேலையில் தான் அவர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது இந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். சிறப்புக்கூறு நிதியிலிருந்தாவது ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அப்படி செய்ய இந்த அரசுக்கு எண்ணமில்லை. இந்த போராட்டம் தொடர்ந்தால் குடிதண்ணீர் விடுவதற்குக்கூட ஆளில்லாமல் புதுச்சேரி நாறிவிடும் சூழல் உள்ளது. இதனை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.


மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குறைந்தபட்ச கூலி நிர்ணயச்சட்டத்தை அமல்படுத்தாத துறையாக புதுச்சேரி தொழிலாளர் துறை செயல்படுகிறது. புதுச்சேரி அரசுத்துறைகளில் மோசமான துறையாக தொழிலாளர் துறை உள்ளது. துறைதான் இப்படி என்றால் அந்த துறையின் அமைச்சரோ பல அரசு சார்பு நிறுவனங்களுக்கு மூடுவிழா கண்டவராக இருக்கிறார். ஸ்பின்கோ, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மூடிய பெருமை அவரையேச்சாரும். இது புதுச்சேரி மக்களின் சாபக்கேடு. ஒரு தனி மனிதனின் கஷ்டத்தை உணருகின்றவர்கள் அரசாங்கத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் தங்களுக்காக உழைத்தவர்ளை இப்படி அல்லல்பட வைப்பார்களா? இந்தியாவில் எந்த மாநிலத்தையும் விட அரசு வேலை என்றால் முகம் சுளிக்கும் மாநிலமாக புதுச்சேரி உள்ளது.
 

புதுச்சேரியில் 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். 5 ஆயிரம் பேர் சம்பளம் இல்லாமல் வேலை செய்கின்றனர். பல ஊழியர்கள் பணி நிரந்தரம் இல்லாமல் அவநம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேடு. இதை இப்படியே விட்டுவிடக்கூடாது. ஆட்சிக்குத்தான் திமுக ஆதரவு. ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமத்திற்கு திமுக ஒருபோதும் ஆதரவளிக்காது. திமுக ஏதோ வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதற்காக இங்கு பேசவில்லை. இந்த போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பேசுகிறேன். இந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் படும் கஷ்டங்களையெல்லாம் அறிந்துதான் இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறோம். இங்கு போராட்டம் நடத்தினால் சம்பிரதாயத்திற்கு நடத்தப்படும் போராட்டமாக மாறிவிடும். ஆட்சியாளர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். நாங்கள் உங்களோடு வருகிறோம். சட்டமன்றத்தை சுற்றியோ அல்லது தலைமைச் செயலகத்தை முடக்குகின்ற வகையில் போராட்டம் நடத்துவோம். ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையாண்டாலும் சிறை சென்றாவது நம் கோரிக்கையை வென்றெடுப்போம். அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கம் துணை நிற்கும் " இவ்வாறு அவர் பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.