Skip to main content

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்'! - துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

PUDUCHERRY GOVERNOR TAMILISAI SOUNDARARAJAN ORDER

 

புதுச்சேரியில் 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை அனைவரும் 'ஆல் பாஸ்' என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பள்ளிகள் மீண்டும் திறக்கவும், தேர்வில் தேர்ச்சி பெரும் முறையை அறிவிக்கவும் பள்ளிக் கல்வி இயக்ககம் சமர்ப்பித்த கோப்புக்கு துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (11/03/2021) ஒப்புதல் அளித்துள்ளார். 

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து வட்டாரங்களிலும் 1 முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் "ஆல் பாஸ்" என்று அறிவிக்கப்படுகிறார்கள். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10 மற்றும் 11- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தமிழ்நாடு வாரியத்தின் வழிகாட்டுதல்படி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் 10 மற்றும் 11- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் வழிகாட்டுதலின் படி தேர்ச்சி முறை அறிவிக்கப்படுவார்கள். 

 

பள்ளிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டில், 1 முதல் 9- ஆம் வகுப்பு வரை மார்ச் 31- ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும். கோடை விடுமுறை ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் துவங்கும். இருப்பினும் 10, 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகள் அந்தந்த மாநில வாரியங்களின் தேர்வு அட்டவணைப்படி நடத்தப்படும். 

 

துணை நிலை ஆளுநர் பின்வரும் இரண்டு செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். முதியோர் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியத்தை 1,54,847 பயனாளிகளுக்கு வழங்க ரூபாய்  29.65 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டது. மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் வாங்குவதற்கு ரூபாய் 24.35 லட்சம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

 

தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 4- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை அனைத்து கள் மற்றும் சாராயக் கடைகள், மதுபானக் கடைகள், கிளப்புகள் மற்றும் பார்கள், மது வழங்கும் உணவகங்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் ஆணை பிறப்பித்துள்ளார். அதேபோல், வாக்குகள் எண்ணும் தினங்களில் மே 2- ஆம் தேதி முதல் மே 3- ஆம் தேதி மாலை 04.00 மணி வரை இக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்" இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.