Skip to main content

காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவு! 

Published on 18/02/2021 | Edited on 19/02/2021

 

puducherry government governor tamilisai order cm narayanasamy

 

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 15-ல் காங்கிரஸ், கூட்டணிக் கட்சியான தி.மு.க 2 இடங்களிலும், காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் என மொத்தம் 18 உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு, ஜுுன் மாதம் 06- ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்றது. 

 

இந்நிலையில், கடந்த வருடம் பாகூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசின் மீதிருந்த நம்பிக்கையின்மை காரணமாக, கடந்த மாதம் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். 

 

அவர்களைத் தொடர்ந்து கடந்த சில நாட்களில் ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மல்லாடி கிருஷ்ண ராவ், காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், தற்போது காங்கிரஸ் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. அதேசமயம் எதிரணியிலும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் 7,  அ.தி.மு.க உறுப்பினர்கள் 4, பா.ஜ.க  நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3, என மொத்தம் 14 பேர் உள்ளனர்.

puducherry government governor tamilisai order cm narayanasamy

ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஒரே அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாகக் கூறி எதிர்க்கட்சிகள் மற்றும் 14 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு துணைநிலை ஆளுநரிடம், 'காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க' வலியுறுத்தி மனு அளித்தனர். 

 

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமியை இன்று (18/02/2021) அழைத்துப் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உடனடியாக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து இன்று ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் "ஆளும் காங்கிரஸ் அரசுக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோன்று எதிர்க்கட்சிகளுக்கும் 14 உறுப்பினர் உள்ளதால் ஆளும் காங்கிரஸ் அரசானது வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

அதிரடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டதால் காங்கிரஸுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.