Skip to main content

புதுச்சேரியில் 500ஐ தாண்டியது கரோனா! கிரண்பேடி எச்சரிக்கை!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

puducherry

 

ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே புதுச்சேரியில் கரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 502 ஆக உயர்ந்தது. இதில் 306 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 187 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல் மாநிலத்தில் இதுவரை 9 நபர்கள் கரோனா தொற்றால் உயிர் இழந்துள்ளனர்.

 

புதுச்சேரி காலாபட்டு மத்தியச் சிறையில் கரோனா தொற்று காரணமாக 7 கைதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பணியாளருக்கு கரோனா உறுதியானதால் அவசர அவசரமாக பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. பி.ஆர்.ஓ. அலுவலக பணியாளர்களுக்கும், சம்மந்தப்பட்ட குடும்பத்தினருக்கும் கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

 

தினமும் 40 நோயாளிகள் அதிகரிப்பதால் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை இன்று முதல் நிறுத்தப்படுவதாகவும், அங்குள்ள நோயாளிகள் சட்டசபை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்வதால் ஒருவாரத்தில் அரசு கோவிட் மருத்துவமனையில் படுக்கைகள் இருக்காது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

இதனிடையே துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரியில் கோவிட் தொற்றால் 50 பேர் புதிய நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற கோவிட் பாதிப்புகளை அதிகரிக்க அனுமதித்தால் ஒரு நாளைக்கு புதியதாக 100 நபர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.  கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் நம்முடைய ஒன்றிணைந்த செயல்பாடுகளால் உழைக்க வேண்டும்.

 

தயவு செய்து அனைவரும் வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும், கடைக்குச் செல்லும் போது சமூக இடைவெளியுடன் செயல்பட வேண்டும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கை, கால்களைச் சுத்தம் செய்து கொண்டு பொதுச் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கிருமிநாசினிகளைக் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படித்திக் கொள்ளவும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பைத் தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினர் உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவே, தயவு செய்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.