puducherry cm talks about nr congress god party 

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா பக்கமுடையான்பேட் இசிஆர் சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனத்தலைவரும், புதுச்சேரி முதலமைச்சருமான என்.ரங்கசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியசாமி படத்திற்குத்தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தார். உடன் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபடும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Advertisment

அதனைப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "கட்சி தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தொடங்கப்பட்டது தான் என்.ஆர்.காங்கிரஸ். கட்சியின் நோக்கம் புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும், அனைத்து திட்டங்களையும் மக்கள் பெற வேண்டும் என்பது தான். ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வந்தோம். இடையில் ஆட்சி செய்தவர்கள் அந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. இப்போது மீண்டும் நமது அரசு ஆட்சியில் அமர்ந்ததும் கடந்த ஆட்சியில் விடுபட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் விரைவில் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி விடுவோம்.

Advertisment

கட்சி தொடங்கும் போது மாநில அந்தஸ்தைப் பெறுவோம் என கூறினோம். தற்போது அது தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்கும் கோரிக்கை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் அந்த கஷ்டங்கள். எல்லோருக்கும், அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தேவையானது மாநில அந்தஸ்து தான். தனிப்பட்ட முறையில் எனது கோரிக்கை மட்டுமல்ல. மாநில அந்தஸ்து கோரிக்கை மாநில வளர்ச்சி, மக்கள் நலனுக்கான கோரிக்கை தான் இது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சியின் வளர்ச்சி இருக்குமா இருக்காதா என்று எண்ணம் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் தோன்றும். நிச்சயமாக கட்சி நல்ல வளர்ச்சியில் இருக்கும். இது ஒரு சாமி கட்சி. அதனால் கட்சி நிச்சயம் வளர்ச்சியில் இருக்கும்" என பேசினார்.