Skip to main content

வாக்கெடுப்பு நடத்தாமலேயே காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

puducherry government narayanasamy cabinets

 

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை 33 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள் ஆவர்.  கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான தி.மு.க 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என மொத்தம் 19 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து, நாராயணசாமி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

 

அதனைத் தொடர்ந்து அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், ஜான்குமார், தீப்பாய்ந்தான் ஆகிய 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க உறுப்பினர் வெங்கடேசன்  என 6 பேரும் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது. அதேபோல், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அ.தி.மு.க. கட்சியில் 4 சட்டமன்ற உறுப்பினர்களும், 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் (பா.ஜ.க.) என மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 

 

அதையடுத்து காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவின்படி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று (22/02/2021) காலை 10.00 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேரும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் கலந்துகொண்டனர்.

puducherry government narayanasamy cabinets

 

சட்டப்பேரவையின் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, கடந்த நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு செய்த சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், ஆட்சியைக் கவிழ்க்க மத்திய பா.ஜ.க அரசு செய்த சூழ்ச்சிகள், புதுச்சேரியை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணித்த நிகழ்வுகள் ஆகியன குறித்து விளக்கவுரை ஆற்றினார். 

 

அவர் பேசும்போது, "துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரண்பேடி மூலம் ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் ஆட்சிக்கு மத்திய பா.ஜ.க அரசு தொல்லை கொடுத்து வந்தது. போதுமான நிதியை வழங்காமல் வஞ்சித்தது. மேலும் எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில், ஆட்சி முடியும் தருவாயிலும் ஆட்சிக் கவிழ்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். புதுச்சேரி மாநில மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது. மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையிலும், பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் வாக்கெடுப்பில் கலந்துகொள்கிறோம்.

 

கடந்த ஆட்சியில் அடிக்கல் நாட்டி நிறைவேற்றப்படாத பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம். மத்திய அரசு காங்கிரஸ் அரசுக்கு நிதி வழங்காத நிலையிலும் மக்களுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். மாநில பட்ஜெட்டில் அறிவித்த 90 சதவீத பணிகளை நிறைவேற்றி உள்ளோம். கரோனா காலத்தில் கூட உயிரைப் பணையம் வைத்து நான், எங்களது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுக்கான பணிகளைச் செவ்வனே செய்துள்ளோம்.

 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரலாம் என்ற சுஷ்மா சுவராஜ் குழுவின் அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது. மத்திய பா.ஜ.க. அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டுமல்லாமல், இந்திய நாட்டு மக்களுக்கே பல்வேறு இன்னல்களைக் கொடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் எரிபொருள் விலையை உயர்த்திக்கொண்டே இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்பதாக சொன்னார்கள், மீட்கவில்லை. ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சம் பணம் போடப்படும் என்று சொன்னார்கள், போட்டார்களா? ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக சொன்னார்கள், கொடுத்தார்களா?" என மத்திய பா.ஜ.க அரசை முதலமைைச்சர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி பேசிக்கொண்டிருந்தார்.

puducherry government narayanasamy cabinets

 

அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் மற்றும் எதிர்க்கட்சியினர்,  "சட்டசபையில் இல்லாதவர்களைப் பற்றி இங்கு பேசக் கூடாது" என்று வாக்குவாதம் செய்தனர். அதற்குப் பதிலளித்த சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, "நாங்கள் செய்தத் திட்டங்களையும் எங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களையும் பேசிக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர். நாங்கள் விடிய விடிய பேசிக்கொண்டிருப்போம்" என்றதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

 

அதைத் தொடர்ந்து பேசிய அரசு கொறடா அனந்தராமன், "ஜனாதிபதி தேர்தலின்போது நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. எனவே இப்போதும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படக்கூடாது" என வலியுறுத்தினார். அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள்," உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அறிவுறுத்தியப் பின்பும் எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதை ஏற்க முடியாது" என வாக்குவாதம் செய்தனர்.

 

இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்த சூழலில் "ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி" எனக் கூறி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆளும் கட்சித் தரப்பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென வெளிநடப்பு செய்தனர். அதனையடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

 

வாக்கெடுப்பு நடத்தாமலேயே புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.