Skip to main content

"கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் எரிபொருள் விலையேற்றம் ஏற்றுக் கொள்ள முடியாது"- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020


 

puducherry cm narayanasamy press meet

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் தற்போது தினந்தோறும் 300 பேருக்கும், ஜிப்மர் மருத்துவமனையில் 300 பேருக்கும் பரிசோதனை செய்து வருகின்றோம். இதனை (1,000) ஆயிரம் பேருக்கு சோதனை செய்யும் அளவில் ஏற்பாடு செய்து வருகின்றோம்.

 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பல்வேறு பகுதிகளில் நியமிக்க நாளை (26.06.2020) நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலித்து அதற்கான உத்தரவுகளைப் போட உள்ளேன். கூனிச்சம்பட்டு பகுதியில் மாஸ்க் தயாரிக்கும் நிறுவனத்தால் 70 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

ஆர்.டி பி.சி.ஆர் கருவி மூலம் கரோனா பரிசோதனை செய்வதால் கால தாமதம் ஆகின்றது. இதற்கு 4,500 ரூபாய் செலவு ஆகின்றது. ஆண்டிஜன் மூலம் பரிசோதனை செய்தால் அரைமணி நேரத்தில் சோதனை செய்யமுடியும்.  மேலும் செலவு குறைகின்றது. இதனைப் புதுச்சேரியில் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நகர பகுதி மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளுக்கும் சென்று பரிசோதனை செய்ய நடமாடும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசும் அதிக பேருக்குச் சோதனை செய்ய வலியுறுத்தி வருகின்றது. இதனால் பல்லாயிரம் பேருக்குச் சோதனை செய்ய முடியும்.

 

மத்திய அரசு 19- ஆம் நாளாக பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றது. டீசல் மட்டுமே 11 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலும் 10 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இது மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும். இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் வந்துள்ளது. இதனால் விலையேற்றத்தை நிறுத்தவேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில் எரிபொருள் விலையேற்றம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவருக்கு மத்திய அரசு 5 கிலோ அரசி இலவசமாகக் கொடுத்தார்கள். தற்போது பலர் வேலையில்லாமல் திண்டாடுகின்றார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஆகவே பிரதமர் இதனைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் வரை இலவச அரிசியைக் கொடுக்க வேண்டும். இது தொழிலாளர்கள் பசியின்றி வாழ வழிவகுக்கும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளேன்.

 

புதுச்சேரியில் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். நகர பகுதியைச் சார்ந்தவர்கள் இரவில் வெளியே நடமாடுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. கோவில்களில், டீ, காபி கடைகளில் கூட்டம் கூட்டமாக நின்று வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளது." இவ்வாறு புதுச்சேரி முதல்வர் பேசினார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.