Skip to main content

"மக்கள் வெளியே வந்தால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கடை திறக்கப்படும்"- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாக கரோனா தொற்று இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு புதுச்சேரியில் நோய்ப் பரவல் இல்லாத நிலையை உருவாக்கி இருக்கின்றோம். முதலமைச்சர், அமைச்சர்கள் என யாருக்கும் தொற்று இல்லை என்று சோதனை முடிவு வந்துள்ளது. காவல்துறை, சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அடுத்தவாரம் பத்திரிகையாளர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை எடுக்கப்படவுள்ளது.
 


துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசை நாடி மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுத்து வருகின்றார். அரசு திட்டங்களுக்குப் பல முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றார். இதுகுறித்து பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன். மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. 
 

puducherry cm narayanasamy peoples coronavirus prevention


புதுச்சேரி அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் துணை நிலை ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். கிரண்பேடி அம்மையார் எங்களுக்குத் தொல்லை கொடுப்பது இல்லாமல், அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அதிகாரிகளுக்கு நேரடியாக வேலை கொடுத்து, அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றார். காவல்துறை அதிகாரிகள் இரவு, பகலாக வேலை செய்தாலும் பலர் அவர்கள் மீது பழி சுமத்தி வருகின்றனர். இதனைச் சரிசெய்ய காவல்துறை தலைவரிடம் தெரிவித்துள்ளேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றம் அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட கூடாது என்று கூறி இருந்தும் அவர் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்படுகின்றார்.
 

http://onelink.to/nknapp


காலை நேரங்களில் பொதுமக்கள் பலர் பொருட்களை வாங்க வருகின்றனர். பலர் அரசின் உத்தரவுகளை மதிப்பதில்லை. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கடை திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். மக்கள் இதேபோன்று வெளியில் வந்து கொண்டிருந்தால் புதுச்சேரியிலும் அதேபோன்று உத்தரவு பிறப்பிக்கப்படும். இதனால் நாம் கவனமாக இருக்கவேண்டும், தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிந்து வர வேண்டும். பொதுமக்கள், அரசைக் கடையை மூட வேண்டிய நிலைக்குத் தள்ள வேண்டாம். புதுச்சேரி மக்கள் தனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும், வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்"  என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.