Skip to main content

“இனி வரும் காலங்களில் அரசு ஊழியர்கள் சில தியாகங்களைச் செய்யத் தயாராக வேண்டும்”- புதுச்சேரி நாராயணசாமி பேட்டி!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

puducherry cm narayanasamy coronavirus discussion


புதுச்சேரி மாநிலத்திலிருந்து வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் தங்கியிருப்பவர்கள் புதுச்சேரி வரவும், புதுச்சேரியில் தங்கியிருக்கும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தோர் வெளியேறவும் தொடர்பு கொள்ள வேண்டிய இணையத்தளத்தை முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (01/05/2020) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (01/05/2020) செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “மத்திய அரசு புதுச்சேரி மாநில பிராந்தியங்களான காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளைப் பச்சை பகுதிகளாகவும், புதுச்சேரியை ஆரஞ்சு பகுதியாகவும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் விதிமுறைகள் மே 4- ஆம் தேதி அமலுக்கு வர உள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த மூவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்றைய தினம் தெரியவந்துள்ளது.
 

 

puducherry cm narayanasamy coronavirus discussion


வெளிமாநிலங்களில் உள்ள மக்களை அந்தந்த மாநிலங்கள் அழைத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மற்ற மாநிலங்களில் உள்ளவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்களை அழைத்துவரவும் ஏற்பாடுகள் செய்ய உள்ளோம். இதேபோன்று வெளிமாநிலத்தில் தங்கி இருப்பவர்களும் எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். வெளி மாநிலங்களில் உள்ளோர் அவரவர்  சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ரயில்களை இயக்க பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன்.
 

puducherry cm narayanasamy coronavirus discussion

 

http://onelink.to/nknapp


இந்த ஊரடங்கை புதுச்சேரி பெற்றோர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். நமது மாநிலத்தைச் சார்ந்தவர்கள் விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். குறைந்த பட்சம் வரும் 2 ஆண்டுகளுக்கு முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் உள்ளோம். மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் ஏப்ரல் மாதம் முழுமையாகச் சம்பளத்தை அளித்தோம். இனி வரும் காலங்களில் அரசு வருமானத்தை அதிகரிக்க முடியாவிட்டால், கரோனா பாதிப்பு தொடருமானால் அரசு ஊழியர்கள் சில தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஒரு சாரார் பட்டினியாக உள்ளதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. எல்லா தியாகங்களுக்கும் அனைத்து தர மக்களும் தயாராக இருக்கவேண்டும். கரோனா நோய் முழுமையாக அகற்றப்படும் வரை நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.