Skip to main content

"மதுக்கடைகள் திறக்க அனுமதி இல்லை"- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

PUDUCHERRY CM NARAYANASAMY CABINET MEETING CORONAVIRUS


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று (03/05/2020) நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “புதுச்சேரி மற்றும் மாஹே பிராந்தியங்களை ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காரைக்காலும், ஏனாமும் பச்சை மண்டலங்களாக அறிவித்துள்ளது. தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளும் திறக்கலாம். எந்தவித முன் அனுமதியும் தேவையில்லை. காலை 06.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை திறந்திருக்கலாம். கைகளில் கிருமி நாசினி தெளிக்கவேண்டும். முகக் கவசம் அணிந்து வரவேண்டும். வேலை செய்பவர்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதில் விதி மீறல்கள் இருந்தால் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 

தொழிற்சாலைகளுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் காலை 06.00 மணிமுதல் திறந்திருக்கலாம். ஆனால் பார்சல் மட்டுமே கொடுக்கவேண்டும். மதுக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. அரசு ஊழியர்கள் 33 சதவீதம் பணிக்கு வரவேண்டும். தனியார் நிறுவனத்திலும் 35 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம். அங்கும் கிருமி நாசினி, முகக் கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். வெளிமாநிலங்களுக்குச் சென்ற புதுச்சேரி தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என 900 பேர்கள் அனுமதி கேட்டு உள்ளார்கள். தொழிலாளர் மற்றும் மாணவர்களை அழைத்து வருவதற்கு தேவையான செலவை அரசே ஏற்கும்.
 

PUDUCHERRY CM NARAYANASAMY CABINET MEETING CORONAVIRUS


தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தொழிற்சாலைகள், கடைகள் இயங்க அனுமதி இல்லை. பக்கத்துக்கு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து உள்ளது. இதனால் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் இருந்து யாரும் புதுச்சேரிக்கு வர அனுமதி கிடையாது. வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு புதுச்சேரியில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதி இல்லை.
 

http://onelink.to/nknapp


மே 17- ஆம் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு தொடரும், புதுச்சேரி மக்கள் மத்திய அரசு அறிவித்த  ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 7 கோடிக்கு மேல் வந்துள்ளது. இவை மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவுகின்றது. இருப்பினும் புதுச்சேரி அரசுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. ஊரடங்கால் ஒன்றரை மாதங்களாக மக்கள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு உடனடியாகப் புதுச்சேரிக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவல்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பணியாளர்களுக்கு திங்கட்கிழமை (இன்று) முதல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார். 

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!