Skip to main content

"ஜூலை 31- ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன்  ஊரடங்கு தொடரும்"- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

puducherry cm narayanasamy announced lockdown extend till july 31

 

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 31- ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று அறிவித்த நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (30/06/2020) புதுச்சேரி மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.  

 

அந்த வீடியோவில், "புதுச்சேரியில் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்துவதன் காரணமாக கடந்த சில நாட்களாக கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி, புதுச்சேரி மாநிலத்திலும் ஜூலை 31- ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும். அதேசமயம் போராட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலத்திற்கு தடை நீட்டிக்கப்படுகிறது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும் ஜூலை 31- ஆம் தேதி வரை தடை தொடரும். மேலும் இரவு 10.00 மணியிலிருந்து அதிகாலை 05.00 மணி வரை ஊரடங்கு முழுமையாக, கடுமையாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். 

 

தொடர்ந்து மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போதும், வெளியே வரும்போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்துக் கடைகள், கோவில்கள் தொழிற்சாலைகளில் தெர்மல் ஸ்கேன் மூலம் மக்களை பரிசோதித்த பின்பே அனுமதிக்க வேண்டும். 

 

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தடை இல்லை. அவர்கள் முழுமையாக பரிசோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்படுவர். மத்திய அரசுக்கு இதுவரை பல்வேறு கோரிக்கைகள் வைத்து 17 கடிதம் எழுதி உள்ளேன். கோரிக்கைகளுக்கு பதில் எதுவும் தரவில்லை. ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய கோரிக்கையை ஏற்று மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும் என அறிவித்த பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.

 

மேலு‌ம், உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உயர்வுகளிலிருந்து தொழிலாளர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு மாதம் ரூபாய்  5 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக புதுச்சேரியின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசுக்கு உதவும் ஒரு நிலையை உருவாக்க முன்வரவேண்டும்" எனவும் தனது வீடியோ பதிவு மூலம் புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.