Skip to main content

புதுச்சேரி முதல்வரின் வீட்டை முற்றுகையிட்ட ரேஷன் கடை ஊழியர்கள்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Puducherry chief minister house besieged by ration shop workers

 

புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் 550க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் அரிசிக்கு பதிலாக பணமாக அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. அதுவும் மாதந்தோறும் சரிவர செலுத்தப்படுவது இல்லை என்கிற புகார்களும் உள்ளன. அரிசி உள்ளிட்ட எந்தப் பொருட்களும் ரேஷனில் வழங்கப்படாததால் ரேஷன் கடைகள் கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கின்றன.

 

ஊழியர்களுக்கும் கடந்த 55 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளைத் திறக்கக் கோரியும், ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் ஊழியர்கள் மட்டுமின்றி தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இன்னமும் இதற்குத் தீர்வு காணப்படவில்லை. விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று பா.ஜ.கவை சேர்ந்த குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் பலமுறை உறுதி அளித்தார். ஆனால், இதுவரை ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.

 

இந்நிலையில், புதுச்சேரி அப்பா பைத்தியம் சாமி கோயில் அருகே உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை ரேஷன் கடை ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள், "கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. அதனால் உங்களுக்குத் தான் நாங்கள் ஓட்டு போட்டோம். ஆனால் நீங்களும் கடையை ஏன் திறக்க மறுக்கிறீர்கள்?" எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து அரிசி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும், நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கடைகளைத் திறக்க முடியாவிட்டால் எங்களை வேறு துறைக்கு மாற்றி விடுங்கள்" என்றனர்.

 

Puducherry chief minister house besieged by ration shop workers

 

அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். அதனால் ஆவேசமடைந்த ரேஷன் கடை ஊழியர்கள் கோரிமேடு - திண்டிவனம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எஸ்.பி பக்தவச்சலம், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை தி.மு.க மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா,  எம்.எல்.ஏக்கள் சம்பத், செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ராஜாங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் இப்பிரச்சனையை சட்டசபையில் எழுப்புவதாக சிவா எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.

 

இது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, "ரேஷன் கடை திறப்பு, நிலுவைச் சம்பளம் குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்டமாக தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர் ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்" என்றனர். தொடர்ந்து மதியத்திற்கு மேல் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.