Skip to main content

புதுச்சேரி: காலாப்பட்டுச் சிறையில் கரோனா வேகமாகப் பரவுவதால் கைதிகளை உடனே விடுவிக்கக் கோரிக்கை!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020


 

puducherry central prisoners coronavirus government

 

காலாப்பட்டுச் சிறையில் கரோனா வேகமாகப் பரவுவதால் கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் என புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த இயக்கங்கள் சார்பாக வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

 

"புதுச்சேரி காலாப்பட்டு மத்தியச் சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் மொத்தம் 158 பேர் உள்ளனர். இவர்களில் 14 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் உடனுக்குடன் விடுதலை செய்யப்படுவதில்லை. இத்தகைய சூழலில் நேற்றைய தினம் காலாப்பட்டுச் சிறையில் 3 கைதிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைச்சாலையில் தற்போது வரை மொத்தம் 5 கைதிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். காலாப்பட்டு மத்தியச் சிறையில் கடுமையான மன உளைச்சலில் இருந்து வரும் சிறைக் கைதிகளைப் புதுச்சேரி அரசு விடுவிக்காத நிலை நீடித்தால், கைதிகள் கரோனா தொற்றினால் பெருமளவில் பாதிக்கப்படுவர்.

 

உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாகச் சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  உச்சநீதிமன்றமும் ஏற்கனவே கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி அரசு இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றாமல் சிறைக் கைதிகளை நோய்த் தொற்றுக்கு உள்ளாக்கி இருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளைப் பிணையிலோ அல்லது நீண்ட கால பரோல் விடுப்பிலோ உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தமிழகத்தில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை உடனுக்குடன் விடுவித்து வருகின்றனர். அதேபோல், புதுச்சேரியிலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளையும் முன்விடுதலை செய்யும் வகையில் அரசாணை ஒன்றை வெளியிட வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இந்தக் கூட்டறிக்கையில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழர் களம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இராவணன் பகுத்தறிவு இயக்கம், செம்படுகை நன்னீரகம், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, தமிழர்களம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.