Skip to main content

தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது புதுச்சேரி பட்ஜெட்!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

Puducherry budget tomorrow - Governor's speech in Tamil!

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நாளை (26.08.2021) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பிற்பகலில் சட்டப்பேரவை துணை தலைவர் தேர்வும், மாலையில் நிதிநிலை அறிக்கை தாக்கலும் நடைபெற உள்ளன.

 

நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இதனையொட்டி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது 15-ஆவது சட்டப்பேரவையின் முதல் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

 

அதே சமயம் 2021 - 22 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வரையறை ரூ. 9,250 கோடிக்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டது. முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு, கூடுதல் பயனாளிகள் சேர்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளால் திட்டங்கள் அதிகரித்திருந்தது. திட்ட மதிப்பில் 10,500 கோடி பட்ஜெட் கேட்டு மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் மத்திய நிதித்துறையின் பரிசீலனையில் திட்ட வரையறை மொத்த மதிப்பீட்டில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதில் ரூபாய் 200 கோடி குறைக்கப்பட்டு 9,900 கோடி பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. மாநில அரசின் திட்ட வரையறை ரூபாய் 10,500 கோடியாக முடிவு செய்யப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதனை அப்படியே ஏற்று அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக நிதித்துறை இந்த தொகையை ஏற்றுக் கொள்ளாமல் எப்போதும் போல ஆண்டுதோறும் 10 சதவீத தொகையை உயர்த்தி கொள்ளலாம் என்ற அடிப்படையில் கடந்த முறை அனுமதி வழங்கிய 9,000 கோடியில் இருந்து 10 சதவீதத்தை உயர்த்தி 9,900 கோடிக்கு அனுமதி வழங்கியது. கூடுதலாக அனுமதி கேட்ட ரூபாய் 200 கோடிக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

Puducherry budget tomorrow - Governor's speech in Tamil!

 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "புதுச்சேரியில் தமிழில் பதவியேற்றது எனக்கு மகிழ்ச்சி. அமைச்சர்களையும் தமிழில் பதவி ஏற்க வைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. வரலாற்றில் முதல்முறையாக புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தமிழில் இடம் பெறப் போகிறது என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

 

பட்ஜெட்டில் மாநில வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும். புதுச்சேரி மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் இங்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும், அதற்கு பக்கபலமாக இருப்போம் என்றும் சமீபத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தபோது தெரிவித்தார்கள்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். 

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.