Skip to main content

எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள்? முதல்வர் நாராயணசாமி அரசு நீடிக்குமா? 

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

puducherry assembly governor order congress, bjp parties

 

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 33. இதில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; மூன்று உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள் ஆவர். அதில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்கள், இரு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. 

 

தற்போதைய நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், 3 தி.மு.க. உறுப்பினர்கள், 1 சுயேச்சை உறுப்பினர் என மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதேபோல், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமிக்கு 7 என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள், 4 அ.தி.மு.க. உறுப்பினர்கள், 3 பா.ஜ.க. உறுப்பினர்கள் என மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. 

 

இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில துணைநிலை ஆளுநரும் (பொறுப்பு), தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், அம்மாநில முதல்வருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்யவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

 

puducherry assembly governor order congress, bjp parties

 

ஆளுநரின் உத்தரவு குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதன்படி, என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான என்.ஆர்.ரங்கசாமி, "புதுச்சேரி அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில், இது எப்படி பழிவாங்கும் நடவடிக்கையாகும்? நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு வாக்குரிமை இல்லை என எப்படிக் கூறமுடியும்? புதுச்சேரி அரசுக்குப் பெரும்பான்மை இல்லாவிடில் ராஜினாமா செய்துவிட்டுச் செல்ல வேண்டும்" என்றார். 

 

தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா கூறியதாவது, "ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டு ஆளுநரை கூடுதல் பொறுப்பாக மத்திய அரசு நியமித்துள்ளது. புதுச்சேரியில் பின்வாசல் வழியாக வர நினைப்பவர்கள் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்வோம்" என்றார். 

 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் கூறியதாவது, "புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதை வரவேற்கிறோம். தாமாக முன்வந்து முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்திருக்கவேண்டும். பெரும்பான்மை இருப்பதாக சவால்விட்ட நாராயணசாமி அதை நிரூபித்துக் காட்ட வேண்டும்" என்றார். 

 

puducherry assembly governor order congress, bjp parties

 

பா.ஜ.க.வின் நமச்சிவாயம் கூறியதாவது, "சபாநாயகர் என்பவர் பொதுவானவர்; அவரையும் எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது? புதுச்சேரி அரசு சட்டரீதியாகச் சென்றால் அதை எதிர்கொள்ள நாங்களும் தயார்" எனத் தெரிவித்துள்ளார். 

 

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி கூறியதாவது, "பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஆளுநர் உத்தரவு பிறப்பித்ததில் மத்திய அரசின் உள்நோக்கம் இருக்கிறது. ஆளுநரின் உத்தரவு தொடர்பாக முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசிக்க உள்ளோம். எங்களுக்குச் சாதகமான முடிவுகள் என்னென்ன என்பது பற்றி ஆலோசிக்க உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு நீடிக்குமா? அல்லது கவிழுமா? என்பது பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று தெரியவரும். புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் ஒருபுறம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், துணைநிலை ஆளுநரின் உத்தரவு அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ் வழியில் மருத்துவம் படிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

 

governor Tamilisai said government taking steps study medicine through Tamil

புதுச்சேரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கெளரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மூத்த குடிமக்களை கெளரவித்தனர்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்  "அனைவரும் தாய் தந்தையரை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகின்றார்கள். ஆனால் வளர்ந்த பின்பு பெற்றோர்களின் பேச்சை கேட்கக்கூட பிள்ளைகள் ஒரு சில துளி நேரத்தை ஒதுக்குவதில்லை. இது வேதனையாக உள்ளது. எனது தாய், தந்தைக்கு நான் மரியாதை கொடுக்கின்றேன். மாற்றுக் கட்சியில் இருந்த என் தந்தையை மதித்து நடக்கின்றேன். 

 

சமீபத்தில் தமிழக அரசு எனது தந்தைக்கு வீடு ஒதுக்கியதை வைத்து என்னை விமர்சனம் செய்தார்கள். தந்தையை பாதுகாக்கவில்லை என  விமர்சனம் செய்தார்கள். இதுபோன்ற விமர்சனங்களை நான் எப்போதும் பெரிதுபடுத்துவதில்லை. எனக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம் என அவர் வேறு முடிவெடுத்தார். இருப்பினும் மருத்துவர் கண்காணிப்பில் தற்போது பாதுகாப்பாக வைத்துள்ளேன். தாய் தந்தைக்குத்தான் முதல்மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு விதிகளைக் கடந்தும் நான் ஆளுநராக பதவி ஏற்றவுடன் மேடையின் கீழ் இருந்த தாய் தந்தையிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டுதான் மற்றவர்களிடம் வாழ்த்து பெற்றேன். ஆகவே முதியோர்களை போற்ற வேண்டும், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், முதியோர்கள் அதிகரிப்பது ஆரோக்கியமானது அல்ல. ஏனெனில் முதுமை எல்லோருக்கும் வரக்கூடியதுதான்” என்றார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, “புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவ படிப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விருப்பப்பட்டவர்கள் தமிழில் மருத்துவம் படிக்கலாம். இதற்காக மருத்துவ படிப்பு புத்தகங்களை தமிழில் அச்சடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

 

மேலும், புதுச்சேரிக்கு கர்நாடகாவில் கனமழை காரணமாக பால்வரத்து குறைந்ததால் சிறிது தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது அதை சரிசெய்ய தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும், தனது தந்தையை தெலுங்கானாவில் தன்னுடைய பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

Next Story

“மற்ற நடிகர்களும் சிரஞ்சீவியைப் பின்பற்ற வேண்டும்” - ஆளுநர் வலியுறுத்தல்

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

governor Tamilisai Soundararajan wishes chiranjeevi

 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக அறியப்படுபவர்  சிரஞ்சீவி  . இவர் தனது 67 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனிடையே இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சிவி காட்ஃபாதர் படத்தில் நடித்து வருகிறர். சிரஞ்சிவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இப்படத்தின் ட்ரைலர் படக்குழு வெளியிட்டது. 

 

சிரஞ்சீவி ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட் ராவ் நினைவாக ஹைதராபாத்தில் உள்ள சித்ராபுரி காலனியில்  மருத்துவமனை ஒன்றை கட்டவுள்ளார். இதற்கான அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவித்த சிரஞ்சீவி அடுத்தாண்டு தனது பிறந்த நாள் முதல் செயல்படும் என கூறியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து தெலுங்கு கிரிக்கெட் சங்கம் சிரஞ்சீவி கட்டும் மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் நன்கொடையாக கொடுத்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் தமன் மருத்துவமனை கட்டுவதற்காக இசைக் கச்சேரி நடத்தி பணம் திரட்டி தருவதாக கூறியுள்ளார். 

 

இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, மருத்துவமனை கட்டும் செயலுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தெலுங்கு திரைப்பட நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப் போவதாக அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ள சகோதரர் சிரஞ்சீவி அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்படத்துறையில் ஏழை தொழிலாளர்களின் நலனுக்காக மற்ற நடிகர்களும் சகோதரர் சிரஞ்சீவியை பின்பற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.