Skip to main content

"இன்று காலை சட்டமன்றம் கூடும்போது எங்களது முடிவு தெரியவரும்" - முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!  

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

puducherry assembly cm narayanasamy

 

புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருந்தனர். ஏற்கனவே ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 ஆகவும், கூட்டணி கட்சியான தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 ஆகவும், காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என 14 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தனர்.

 

இதேபோன்று எதிரணியிலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 உறுப்பினர்களும், அ.தி.மு.க.வில் 4 உறுப்பினர்களும், மூன்று நியமன உறுப்பினர்கள் என மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதையடுத்து எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் பெரும்பான்மையை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநருக்கு கடிதம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 'காங்கிரஸ் அரசு இன்று (22.02.2021) மாலை 05.00 மணிக்குள் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து இன்று (22.02.2020) காலை 10.00 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று சட்டசபை சபாநாயகர் உத்தரவின்பேரில் சட்டப்பேரவைச் செயலாளர் முனுசாமி அறிவித்திருந்தார் 

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று (21/02/2021) ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் நேரில் வழங்கினார். இதேபோல் தி.மு.க.வைச் சேர்ந்த தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்த நிலையில், மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

 

இந்த நிலையில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் காங்கிரஸுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

 

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "பெரும்பான்மை நிரூபிப்பது குறித்து, இன்று காலை சட்டமன்றம் கூடும்போது எங்களது முடிவை தெரிவிப்போம்" என்றார்.

 

இதனிடையே முதலமைச்சர் நாராயணசாமி, தனக்கு வழங்கிய பாதுகாப்பை குறைத்துக் கொண்டுள்ளார். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்புக்காக இரண்டு கார்கள் சென்ற நிலையில், அதில் ஒரு காரை குறைத்துக் கொண்டுள்ளார். இதேபோல் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியும் தனக்கு வழங்கப்பட்ட காரை ஒப்படைத்துள்ளார். இன்று சட்டமன்றம் கூடும்போது காங்கிரஸ், தி.மு.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிய வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.